குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: யார் இந்த மார்கரெட் ஆல்வா?

குடியரசு துணைத் தலைவராக உள்ள வெங்கையா நாயுடுவின் பதவிக்காலம் ஆகஸ்ட் 10ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இதையொட்டி, குடியரசு துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல் வருகிற ஆகஸ்ட் மாதம் 6ஆம் தேதி நடைபெறும் என இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அன்றைய தினமே வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் எனவும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் ஜூலை மாதம் 5ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்னர், தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பாக ஜெகதீப் தன்கர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த இவர் மேற்குவங்க ஆளுநராக அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜியுடன் கடுமையான மோதல் போக்கை கடைப்பிடித்தவர்.

இந்த நிலையில், எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் தொடர்பாக காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாடி, ராஷ்ட்டிரிய ஜனதா தளம், சிவசேனா, தேசியவாத
காங்கிரஸ்
உள்ளிட்ட 16 எதிர்க்கட்சிகள் டெல்லியில் ஆலோசனை மேற்கொண்டன. அதன் முடிவில், குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கான எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மார்கரெட் ஆல்வா அறிவிக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை கூட்டம் முடிந்ததும் தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத்பவார் வெளியிட்டார்.

ஜூலை 19ஆம் தேதி வேட்புமனுத்தாக்கல் செய்ய கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அன்றைய தினம் மார்கரெட் ஆல்வா வேட்புமனுத்தாக்கல் செய்யவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜெகதீப் தன்கர் தனது வேட்புமனுவை ஜூலை 18ஆம் தேதி (இன்று) தாக்கல் செய்யவுள்ளார்.

குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கான எதிர்க்கட்சிகளின் வேட்பாளராக தன்னை தேர்வு செய்ததற்கு நன்று என தனது ட்விட்டர் பக்கத்தில் மார்கரெட் ஆல்வா பதிவிட்டுள்ளார். 1942ஆம் ஆண்டு கர்நாடகா மாநிலம், மங்களூரில் பிறந்த மார்கரெட் ஆல்வா (77), மத்திய அமைச்சராகவும், ஐந்து முறை எம்.பி.,யாகவும் இருந்துள்ளார். மறைந்த முன்னாள் பிரதமர்கள் ராஜீவ் காந்தி, நரசிம்மராவ் ஆகியோரது அமைச்சரவையில் மத்திய அமைச்சராக இருந்துள்ளார்.

கோவா, ராஜஸ்தான், குஜராத் மாநிலத்திலும் ஆளுநராக இருந்துள்ளார். கடைசியாக உத்தரகாண்ட் ஆளுநராக இருந்த அவர், 2014ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார். சிறிது காலம் மாநிலங்களவை துணைத்தலைவராகவும் பதவி வகித்துள்ளார். கடந்த 2004ஆம் ஆண்டு முதல் 2009ஆம் ஆண்டு வரை அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளராகவும் மார்கரெட் ஆல்வா இருந்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.