பிரிட்டனின் அடுத்த பிரதமர் யார்?இறுதிப் போட்டியில் ரிஷி, லிஸ் டிரஸ்!| Dinamalar

லண்டன்:பிரிட்டனின் அடுத்த பிரதமராக பதவியேற்க உள்ள ஆளும் பழமைவாத கட்சித் தலைவர் பதவிக்கான இறுதிப் போட்டியில், இந்திய வம்சாவளி ரிஷி சுனக் மற்றும் வெளியுறவு அமைச்சர் லிஸ் டிரஸ் மோத உள்ளனர்.
ஐரோப்பிய நாடான பிரிட்டனில், பிரதமர் போரிஸ் ஜான்சன் பதவி விலகியதை அடுத்து, ஆளும் பழமைவாத கட்சி தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடந்து வருகிறது. கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்படு பவரே பிரதமர் பதவியை ஏற்க முடியும்.கடந்த சில வாரங்களாக நடந்து வரும் இத்தேர்தலில், முதலில் எட்டு பேர் போட்டியிட்டனர்.

ஒவ்வொரு சுற்றிலும் குறைந்த ஓட்டு பெறுவோர் வெளியேற்றப்பட்டு வந்தனர்.அதன்படி, நான்காம் கட்ட தேர்தல் நேற்று முன்தினம் நடந்தது. இதன் இறுதியில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த, முன்னாள் நிதியமைச்சர் ரிஷி சுனக், கூடுதலாக மூன்று ஓட்டுகள் பெற்று, 118 ஓட்டுகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் இருந்தார்.
வர்த்தக அமைச்சர் பென்னி முர்டான்ட் 10 ஓட்டுகள் கூடுதலாக பெற்று, 92 ஓட்டுகளுடன் இரண்டாம் இடத்தில் இருந்தார். வெளியுறவு அமைச்சர் லிஸ் டிரஸ், யாரும் எதிர்பார்க்காத வகையில் 15 ஓட்டுகள் கூடுதலாக பெற்று, 86 ஓட்டுகளுடன் மூன்றாவது இடத்தைப் பிடித்தார்.
இந்நிலையில் நடந்த ஐந்தாம் மற்றும் கடைசி கட்டத் தேர்தலில் மேலும், 19 ஓட்டுகளைப் பெற்று, மொத்தம், 137 ஓட்டுகளுடன் ரிஷி சுனக் முதலிடத்தைப் பிடித்துள்ளார். முந்தைய சுற்றில், 86 ஓட்டுகளுடன் மூன்றாம் இடத்தில் இருந்த லிஸ் டிரஸ், 113 ஓட்டுகளுடன் இரண்டாவது இடத்துக்கு முன்னேறினார். பென்னி மிர்டான்ட், 105 ஓட்டுகளுடன் வெளியேறினார்.
இதையடுத்து, இறுதிப் போட்டியில் ரிஷி சுனக் மற்றும் லிஸ் டிரஸ் மோத உள்ளனர். கட்சியின், 1.60 லட்சம் தொண்டர்கள் ஓட்டளித்து கட்சியின் புதிய தலைவரை தேர்ந்தெடுக்க உள்ளனர். இதற்கான தேர்தல் செப்., 5ம் தேதிக்குள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.இதற்கிடையே, பிரதமர் பதவியில் இருந்து விலகியுள்ள போரிஸ் ஜான்சன், பார்லிமென்டில் தனது கடைசி உரையை நேற்று நிகழ்த்தினார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.