காபூல்: ஆப்கானிஸ்தானில் பிரபல யூடியூபரை தலிபான்கள் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சிக்கு வந்தது முதல் கடுமையான கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக, பெண்களை முடக்கும் நடவடிக்கையில் தலிபான் அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.
ஆப்கானிஸ்தானில் வீட்டைவிட்டு பெண்கள் வெளியே வரும்போது, உடலை முழுவதும் மூடக்கூடிய நீலநிற புர்கா அணிந்தே வரவேண்டும். அவ்வாறு முகத்தை மறைக்காமல் வரும் பெண்களின் தந்தை அல்லது நெருங்கிய ஆண் உறவினர்கள் சிறையில் அடைக்கப்படுவார்கள். அரசாங்க வேலையில் இருந்து நீக்கப்படுவார்கள் என்று தலிபான்கள் ஏற்கெனவே அறிவித்திருந்தது. மேலும் பொழுதுபோக்குத் தளங்களை முடக்கும் நடவடிக்கைகளிலும் தலிபான்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், ஆப்கானின் பிரபல யூ-ட்யூபரும், மாடலுமான அஜ்மலை தலிபான்கள் கைது செய்து சித்ரவதைக்கு உள்ளாக்கியதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அஜ்மல் மற்றும் அவருடன் இணைந்து பணிபுரிந்த மூவரை மத அவதூறு குற்றச்சாட்டின் பெயரால் தலிபான்கள் கைது செய்தனர். கைது செய்தவர்களை தாக்கும் வீடியோவையும் தலிபான்கள் வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ ஆப்கானிஸ்தானில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
”அஜ்மல் மிகவும் நேர்மையானவர், ஆப்கானின் கலைகளை தனது நிகழ்ச்சிகள் மூலம் உலகுக்கு வெளிக்கொண்டு வந்தவர். அஜ்மலுக்கு நேர்ந்தது நிச்சயம் கண்டனத்துக்குரியது” என்று சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.