கொழும்பு: இலங்கையில் அதிபர் மாளிகை, பிரதமர் இல்லத்திலிருந்து 1000க்கும் அதிகமான கலை பொருட்கள் மாயமாகி இருப்பதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையில், அத்தியாவசியப் பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. மக்களின் தன்னெழுச்சியான போராட்டத்தால் பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்ச விலகினார். இதையடுத்து, அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சவும் கடந்த வாரம் பதவி விலக நேரிட்டது.
முன்னதாக, இடைக்கால அதிபராக ரணில் விக்ரமசிங்கேவை நியமித்த அவர், மாலத்தீவுக்கும், பின்னர் சிங்கப்பூருக்கும் தப்பிச் சென்றுவிட்டார். இதனால், புதிய அதிபரை தேர்வு செய்ய இலங்கை நாடாளுமன்றத்தில் ரகசிய வாக்கெடுப்பு நடத்த முடிவு செய்யப்பட்டது. இதில் இலங்கை நாடாளுமன்றத்தில் நடைபெற்ற ரகசிய வாக்கெடுப்பில் புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்கே (73) தேர்வு செய்யப்பட்டு பதவியேற்றார்.
இந்த நிலையில் அதிபர் மாளிகை மற்றும் பிரதமர் இல்லத்திலிருந்து கலை பொருட்கள் திருடப்பட்டுள்ளதாக இலங்கை போலீஸார் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து போலீஸார் வெளியிட்ட அறிவிப்பில், “ முதற்கட்ட விசாரணைகளின் அடிப்படையில், அதிபர் மாளிகை அற்றும் பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் இருந்து அரிய தொல்பொருட்கள் உட்பட குறைந்தது 1,000 பெரும்மதிப்பிலான பொருட்கள் காணாமல் போயுள்ளன. இது தொடர்பாக விசாரணையை தொடங்க சிறப்பு புலனாய்வு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.