ஈரானில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 22 ஆக உயர்வு

டெஹ்ரான்,

பருவநிலை மாற்றம் சர்வதேச அளவில் மிகப்பெரிய பிரச்சினையாக உருவெடுத்து வருகிறது. இதன்காரணமாக உலகின் பல நாடுகளில் பருவம் தவறிய மழை, வெள்ளம் போன்ற இயற்கை பேரிடர்கள் ஏற்பட்டு வருகின்றன.

அந்த வகையில் ஈரானில் பல ஆண்டுகளாக வறட்சியை சந்தித்து வந்த தெற்கு பராஸ் மாகாணத்தில் பருவ நிலை மாற்றத்தின் விளைவால் நேற்று முன்தினம் திடீரென கனமழை கொட்டித்தீர்த்தது.

கரைபுரண்டோடும் வெள்ளம்

அந்த மாகாணத்தின் எஸ்தாபன் நகரில் இடைவிடாமல் கொட்டிய கனமழையால் அங்குள்ள நீர்நிலைகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

அதைத் தொடர்ந்து, ஊர்களுக்குள் வெள்ளம் புகுந்து கரைபுரண்டோடியது. மேலும் குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்ததால் 100-க்கும் மேற்பட்ட வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின.

சாலைகளில் வெள்ளம் ஆறாக பெருக்கெடுத்து ஓடுவதால் வாகன போக்குவரத்து தடை போட்டுள்ளது. இந்த திடீர் வெள்ளத்தால் அங்குள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் முடங்கியுள்ளது.

இந்த நிலையில் வெள்ளத்தில் சிக்கி 22 பேர் உயிரிழந்ததாகவும், 6 பேர் மாயமாகி உள்ளதாகவும் பராஸ் மாகாணத்தின் ஆளுநர் யூசுப் கரேகர் கூறினார்.

வெள்ளத்தில் சிக்கிய டஜன் கணக்கானோர் மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், மழை, வெள்ளம் பாதித்த பகுதிகளில் முழு வீச்சில் மீட்பு பணிகள் நடந்து வருவதாக கூறினார்.

முன்னதாக கடந்த 2018-ம் ஆண்டு மார்ச் மாதம் பராஸ் மாகாணத்தில் இதே போல் திடீர் வெள்ளம் ஏற்பட்டதில் 44 பேர் பலியானது நினைவுகூரத்தக்கது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.