திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகே ஒட்டன்சத்திரம் சாலையில் உள்ள தங்கும் விடுதியில் பாபு சான்டா என்பவர் ஏராளமான வடமாநில தொழிலாளர்களை தங்க வைத்து நூற்பாலைக்கு வேலைக்கு அனுப்பி வந்துள்ளார்.
இதில், ஒனடிசா மாநிலத்தைச் சேர்ந்த ரீத்தா முனாக்கூர், போர்சா ராணி ஜெயா என்ற 2 இளம்பெண்கள் எங்களால் இங்கு வேலை செய்ய முடியவில்லை, எங்களை ஊருக்கு அனுப்பி விடுங்கள் என்று கூறியுள்ளனர். ஆனால் பாபு சான்டா அவர்களை ஊருக்கு அனுப்பாமல் ஒரு அறைக்குள் பூட்டி வைத்துள்ளார்.
மேலும், அவர்களுக்கு உணவு, தண்ணீர் ஏதும் கொடுக்காமல் அவர்களின் அடையாள அட்டைகள் மற்றும் செல்போன்களையும் பறித்து வைத்துக் கொண்டு வேலைக்கு சென்றால் தான் உங்களது பொருட்களை திருப்பி தருவேன் என மிரட்டியுள்ளார்.
இந்த நிலையில், அந்த பெண்கள் அங்கிருந்து தப்பித்து சென்று வேடசந்தூர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதன் பின்னர் காவல்துறையினர் பாபு சான்டாவை காவல்நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். இதனை அடுத்து இளம்பெண்கள் இருவரும் ஒடிசா மாநிலத்திற்கு பாதுகாப்புடன் அனுப்பி வைத்தனர்.