சூரரைப் போற்று திரைப்படத்திற்கு 5 தேசிய விருதுகள் கிடைத்த நிலையில், இயக்குநர் சுதா கொங்கரா தற்போது படத்தில் பணியாற்றியவர்களுக்கும் ரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்து கடிதம் ஒன்றை ட்விட்டரில் வெளியிட்டிருக்கிறார்.
‘சூரரைப் போற்று’ திரைப்படம் இயக்குநர் சுதா கொங்கரா இயக்கிய ஜி.ஆர்.கோபிநாத் பற்றிய பயோபிக் படமாகும். இதில் சூர்யா, அபர்ணா பாலமுரளி, காளி வெங்கட், கருணாஸ் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். 2020-ல் வெளியான இத்திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகாமல் OTT தளமான அமேசான் பிரைமில் வெளியானது. இந்நிலையில் கடந்த வாரம் 68-வது தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டது. இதில் `சூரரைப் போற்று’ திரைப்படத்திற்கு சிறந்த திரைப்படம், சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த இசையமைப்பாளர் மற்றும் சிறந்த திரைக்கதை என 5 தேசிய விருதுகள் கிடைத்திருந்தது.
தற்போது படத்தில் பணியாற்றியவர்கள் மற்றும் ரசிகர்கள் என அனைவருக்கும் நன்றி தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் இயக்குநர் சுதா கொங்கரா. அதில், `சூரரைப் போற்று படத்தின் பயணம் என் தந்தையின் மறைவில் இருந்துதான் தொடங்கியது. என் தந்தை படுத்த படுக்கையாக இருந்தபோது, வாசலில் நின்றிருந்த என்னை கடைசியாக கையசைத்து கூப்பிட்டார். அந்த நிகழ்வை தான் சூரரைப் போற்று படத்திலும் வைத்திருக்கிறேன். என் வாழ்வில் நடந்த பல தருணங்களை சூரரைப் போற்று படத்தில் பயன்படுத்தி இருக்கிறேன். அதற்கு என் தந்தைக்கு நன்றி என்றும், எனக்கு ஒரே ஒரு வருத்தம் என்னவென்றால், நான் தேசிய விருது வென்றதை என் தந்தையால் பார்க்க முடியவில்லை என்பதுதான் என்று அவருடைய வருத்தத்தையும் அக்கடிதத்தில் தெரிவித்திருக்கிறார்.மேலும் என் குரு மணிரத்னம் அவர்களுக்கு நன்றி. இன்று நான் இந்த நிலையில் இருப்பதற்கு மணி சார் தான் காரணம். அவர் இல்லையென்றால் நான் வெறும் ஜீரோ தான். தன் வாழ்க்கையை படமாக்க அனுமதித்த கோபிநாத் சாருக்கும், கோபிநாத்தாக வாழ்ந்த சூர்யாவுக்கும் மிக்க நன்றி. என் குடும்பத்துக்கு மிகப்பெரிய நன்றி” என்றும் சுதா கொங்கரா தெரிவித்துள்ளார்.