காங்கோ: ஐ.நா. அமைதிப்படைக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை ; இந்திய வீரர்கள் 2 பேர் பலி

கின்ஷசா,

மத்திய ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு காங்கோ. இந்நாட்டில் பயங்கரவாத அமைப்புகளும், கிளர்ச்சியாளர் குழுக்களும் செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்புகள் அந்நாட்டு மக்கள், அரசு படைகள் மீது அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதலில் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர்.

இதற்கிடையில், காங்கோவில் அமைதியை நிலைநாட்டவும், அரசுப்படைகளுக்கு ஆதரவாகவும் ஐ.நா.வின் அமைதிப்படை நிலைநிறுத்தப்பட்டுள்ளது. இந்த அமைதிப்படையில் இந்திய பாதுகாப்பு படை வீரர்களும் இடம்பெற்றுள்ளனர்.

இந்நிலையில், ஐ.நா. அமைதிப்படைகள், உள்நாட்டு படைகள் இருந்தபோதும் காங்கோவில் பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்ந்து அதிகரித்து வந்தது.

இதனால், ஆத்திரமடைந்த மக்கள் அந்நாட்டின் வடக்கு கிவு மாகாணத்தில் உள்ள புடிம்போ நகரில் அமைந்துள்ள ஐ.நா. அமைதிப்படை அலுவலகத்திற்குள் அத்துமீறி நுழைந்தனர்.

அலுவலகத்திற்கு நுழைந்த போராட்டக்காரர்கள் அங்கிருந்த பொருட்களை அடித்து நொறுக்கினர். பின்னர், அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த அமைதிப்படை வீரர்களையும் கடுமையாக தாக்கினர். பாதுகாப்பு படையினர் துப்பாக்கியை பறித்து அவர்கள் மீது துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தினர்.

இந்த வன்முறையின் போது ஐநா அமைதிபடை வீரர்கள் 3 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்த 3 வீரர்களில் 2 பேர் இந்திய பாதுகாப்பு படை வீரர்கள் என்பது தெரியவந்துள்ளது.

இந்திய எல்லை பாதுகாப்பு படையை சேர்ந்த ஷிஷுபால் சிங் மற்றும் சன்வாலா ராம் விஷொனி ஆகிய 2 வீரர்கள் இந்த வன்முறையில் உயிரிழந்துள்ளதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.

இந்த வன்முறை சம்பவத்திற்கு ஐ.நா. பொதுச்செயலாளர் கண்டனம் தெரிவித்துள்ளார். காங்கோ வன்முறையில் ஐ.நா. அமைதிப்படையில் பணியாற்றிய இந்திய வீரர்கள் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் கண்டனமும், இரங்கலும் தெரிவித்துள்ளார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.