குரங்கு அம்மை பரவல் ஓர் எச்சரிக்கை மணி: உலக சுகாதார நிறுவன விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன்

குரங்கு அம்மை பரவல் ஓர் எச்சரிக்கை மணி என்று கூறியுள்ளார் உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி சவுமிய சாமிநாதன். உலகம் முழுவதும் 75 நாடுகளுக்கும் மேல் 16 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு குரங்கு அம்மை பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் இது குறித்து தனியார் தொலைக்காட்சிக்குப் பேட்டியளித்துள்ளார் உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன். அந்த பேட்டியில் அவர், “குரங்கு அம்மை பரவல் நமக்கு ஓர் எச்சரிக்கை மணி. நாம் எப்போதுமே வைரஸ் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும்.

குரங்கு அம்மையானது குரங்கு அம்மை வைரஸால் உருவாகிறது. இது ஆர்தோபாக்ஸ் வைரஸ் குடும்பத்தைச் சேர்ந்தது. ஒருவகையில் இது 1980களில் ஒழிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட பெரியம்மை நோயை ஏற்படுத்தும் ஆர்த்தோபாக்ஸ் வைரஸை ஒத்த பண்புகளைக் கொண்டது.

1979, 1980களுக்குப் பின்னர் பெரியம்மை தடுப்பூசி பரவலாக நிறுத்தப்பட்டுவிட்டது. இதுவும் கூட இந்த வைரஸ் இப்போது மீண்டும் உலகில் உலா வர காரணமாகியுள்ளது.

பெரியம்மை தடுப்பூசிகளே குரங்கு அம்மைக்கு எதிராக பாதுகாப்பு நல்கினாலும் கூட குரங்கு அம்மைக்கு என பிரத்யேகமாக தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.

நம்மிடம் இப்போதுள்ள பெரியம்மை தடுப்பூசிகள் எல்லாம் இரண்டாம், மூன்றாம் தலைமுறை தடுப்பூசிகள். அவையும் குறிப்பிட்ட அளவிலேயே இருக்கின்றன.

அண்மையில் டென்மார்க்கைச் சேர்ந்த பவேரியன் நார்டிக் என்ற நிறுவனம் புதிய தடுப்பூசியை உருவாக்கியுள்ளது. ஆனால் அதன் வீரியம் பற்றிய புள்ளிவிவரங்கள் இன்னும் கிடைக்கப்பெறவில்லை. அந்தத் தரவுகளை சேகரிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. பவேரியன் நார்டிக் நிறுவனம் 16 மில்லியன் டோஸ் குரங்கு அம்மை தடுப்பூசியை வைத்துள்ளது. இவ்வேளையில் இந்தியா மிக முக்கிய பங்கு வகிக்கும் என எதிர்பாஎக்கிறேன். இன்னொரு பெருந்தொற்ற எதிர்கொள்ள ஆயத்தநிலை அவசியம். அதனால் தடுப்பூசி உற்பத்தியை அதிகரிக்கலாம்.

புனேவின் சீரம் இன்ஸ்டிட்யூட் நிறுவனம் இதை முன்னெடுத்து செய்யலாம். தொழில்நுட்ப தரவுகளைப் பகிர்ந்தால் வேறு மருந்து நிறுவனங்களையும் தடுப்பூசி தயாரிப்பில் ஈடுபடுத்தலாம். குரங்கு அம்மை கோவிட் புதிய திரிபுகளைவிட ஆபத்தானதாக இருக்குமா என்றால் அதை நேரடியாக ஒப்பிட முடியாது என்றே சொல்லலாம். குரங்கு அம்மை என்பது வேறு வைரஸ் குடும்பத்தைச் சேர்ந்தது. அது கரோனா வைரஸ் போல் வேகமாக உருமாறச் செய்யாது.

இந்நிலையில் குரங்கு அம்மை பாதிப்பு குறித்து உலக நாடுகள் உலக சுகாதார நிறுவனத்துடன் தகவல் பகிர வேண்டும். மரபணு பகுப்பாய்வு தரவுகளை உலக நாடுகள் எங்களுக்கு அனுப்ப வேண்டும். குரங்கு அம்மை இன்னொரு பெருந்தொற்றாக உருவாகமல் தடுக்க வேண்டும்” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.