சோனியாகாந்தியிடம் 3-வது நாள் விசாரணை நிறைவு

புதுடெல்லி,

நாட்டின் முதல் பிரதமரான ஜவகர்லால் நேருவால் தொடங்கப்பட்ட ‘நேஷனல் ஹெரால்டு’ பத்திரிகையை வெளியிட்டு வந்த ‘அசோசியேட்டட் ஜர்னல்ஸ்’ நிறுவனத்தை காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி, அவரது மகன் ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் மூத்த தலைவர்களை இயக்குனர்களாக கொண்ட ‘யங் இந்தியா’ நிறுவனம் கையகப்படுத்தியது.

இதன்மூலம் ரூ.2 ஆயிரம் கோடி சொத்துக்களை ‘யங் இந்தியா’ அபகரித்துள்ளதாக பா.ஜ.க. மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி வழக்கு போட்டு அது டெல்லி கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. இதில் சட்ட விரோத பண பரிமாற்றம் நடந்துள்ளதாகக் கூறி, அதுபற்றி மத்திய அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. இது தொடர்பாக ராகுல் காந்தியிடம் 5 நாட்கள் சுமார் 50 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து விசாரணைக்காக சோனியா காந்திக்கு 2 முறை சம்மன் அனுப்பியும், கொரோனா பாதிப்பால் அமலாக்கத்துறை முன்பாக அவரால் ஆஜராக முடியவில்லை.

தொற்றில் இருந்து மீண்ட நிலையில், கடந்த 21-ந் தேதி அமலாக்கத்துறை இயக்குனரகத்தில் சோனியா காந்தி முதல் முறையாக ஆஜரானார்.

இந்தநிலையில், நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக சோனியாகாந்தியிடம் 3-வது நாளாக நடந்த விசாரணை நிறைவு பெற்றதாக அமலாக்கத்துறை வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 3 நாட்களிலும் சுமார் 11 மணி நேரம் சோனியாகாந்தியை அமலாக்கத்துறை விசாரித்துள்ளது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.