நேஷனல் ஹெரால்டு வழக்கு: சோனியா காந்தியிடம் 3-வது நாளாக அமலாக்கத்துறை நடத்திய விசாரணை நிறைவு

டெல்லி: நேஷனல் ஹெரால்டு வழக்கில் சோனியாவிடம் 3ம் நாளாக அமலாக்கத்துறை நடத்திய விசாரணை நிறைவு பெற்றது. ஏற்கனவே 2 நாட்கள் டெல்லியில் அமலாக்கத்துறை முன்பு ஆஜராகியிருந்த நிலையில், 3வது நாளான இன்றும் காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி ஆஜரானார். ஜூலை 22ம் தேதியன்று முதன்முதலாக ஆஜரான நிலையில், அவரிடம் அமலாக்கத்துறையினர் சுமார் 3 மணி நேரம் விசாரணை நடத்தினர். அதன்பின் நேற்றைய தினமும் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியதையடுத்து மீண்டும் சோனியா காந்தி ஆஜரானார். நேற்று சுமார் 6 மணி நேரம் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.2 நாட்களாக சோனியாவிடம் 9 மணி நேரமாக அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இந்நிலையில் சோனியா காந்திக்கு சம்மன் அனுப்பியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த 22ம் தேதி அமலாக்கத்துறை முன் சோனியா ஆஜராகும்போது, அதற்கு எதிர்ப்பு தெரிவித்து  காங்கிரஸ் கட்சி எம்.பி.க்கள் போராட்டம் நடத்தினர். இதேபோல் நேற்றைய தினமும் காங்கிரஸ் கட்சி எம்.பி.க்கள் எதிர்ப்பு தெரிவித்து, குடியரசு தலைவர் மாளிகை முன்  போராட்டம், நடத்தி, தர்ணாவில் ஈடுபட்டனர். இதனால் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி உள்பட 75 எம்.பி.க்கள் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்களை இரவு 8 மணியளவில் டெல்லி போலீசார் விடுதலை செய்தனர். இதனைத்தொடர்ந்து 3வது நாளாக இன்று ஆஜரான சோனியாவிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் நடத்திய விசாரணை நிறைவு பெற்றது. மொத்தம் 3 நாட்களிலும் சுமார் 11 மணி நேரம் சோனியா காந்தியை அமலாக்கத்துறை விசாரித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.