கர்நாடக மாநிலம், பல்லாரியில் நாகராஜ் என்பவர் தன் மனைவி மற்றும் 4 குழந்தைகளுடன் வசித்துவந்திருக்கிறார். குடும்ப வறுமையின் காரணமாக அவ்வப்போது தாது-முன்னி என்ற தம்பதியிடம் கடன் பெற்றுவந்திருக்கிறார். இந்த நிலையில், நாகராஜ் திடீரென உடல்நலக்குறைவால் மரணமடைந்துவிட்டார். நாகராஜின் மனைவி சுனிதா வீட்டுப் பணிப்பெண்ணாக வேலை செய்து தன்னுடைய நான்கு குழந்தைகளையும் வளர்த்து வந்தார். இந்த நிலையில், தாது-முன்னி தம்பதியினர் நாகராஜ் தங்களிடம் ரூ.30 ஆயிரம் கடன் வாங்கியிருப்பதாகவும், அதனை உடனே தரவேண்டும் எனவும் அடிக்கடி தொல்லை கொடுத்து வந்திருக்கின்றனர்.
ஒருகட்டத்தில், “பணம் கொடுத்துவிட்டு உன்னுடைய பிள்ளைகளை அழைத்துச்செல்..!” என உயிரிழந்த நாகராஜின் நான்கு குழந்தைகளில் இருவரை கொத்தடிமைகளாக வேலை செய்ய வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றிருக்கின்றனர். அதைத் தொடர்ந்து இந்தத் தகவல் ஸ்ரீராம்புரா நகர மகளிர் காங்கிரஸ் பிரிவினர்களுக்கு கிடைத்திருக்கிறது. அவர்கள் காவல்துறையினருடன் இணைந்து சோதனைகளை நடத்தி குழந்தைகளை மீட்டனர். போலீஸார் அந்தத் தம்பதியினர்மீது இது தொடர்பாக வழக்கு பதிவுசெய்திருக்கின்றனர்.
தந்தை வாங்கிய கடனுக்காக குழந்தைகள் கொத்தடிமைகளாக்கப்பட்ட சம்பவம் அந்தப் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.