மேற்கு வங்க மாநிலத்தில் முதலமைச்சர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றுவருகிறது. கடந்த 2016-ம் ஆண்டு பார்த்தா சாட்டர்ஜி கல்வித்துறை அமைச்சராக இருந்தபோது, பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் நியமனம் செய்வதற்கு நடந்த தேர்வில் முறைகேடு நடந்ததாகப் புகார் எழுந்தது. இதையடுத்து, தற்போது அந்த மாநிலத்தின் தொழில்துறை அமைச்சராக இருக்கும் பார்த்தா சாட்டர்ஜியை அமலாக்கத்துறை அதிகாரிகள் ஜூலை 23-ம் தேதி கைதுசெய்தனர்.
இந்த நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் அபிஷேக் பானர்ஜி செய்தியாளர்கள் சந்திப்பின் போது, “பார்த்தா சாட்டர்ஜி திரிணாமுல் காங்கிரஸின் பொதுச்செயலாளர், தேசிய துணைத் தலைவர் மற்றும் மூன்று பதவிகளிலிருந்து நீக்கப்பட்டிருக்கிறார். விசாரணை நடைபெறும்வரை அவர் இடைநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். திரிணாமுல் காங்கிரஸ் ஊழலைச் சகித்துக் கொள்ளாது. யாராவது தவறு செய்தால் அவர்களை சும்மா விடாது. அவர் குற்றமற்றவர் என நிரூபிக்கப்பட்டால் மீண்டும் கட்சிக்கு வரலாம்.
சாரதா வழக்கில் எதுவும் நடக்கவில்லை. ஆனால் அதன் விசாரணை இன்னும் நீடிக்கிறது. எனவே, புலனாய்வு அமைப்பும் குறிப்பிட்டக் காலத்துக்குள் விசாரணையை முடிக்க வேண்டும். ஒரு கற்பனைக்காகக் கூறுகிறேன், ஒருவேளை பார்த்தா சாட்டர்ஜி பா.ஜ.க-வுக்குச் சென்றால், இரண்டு மாதங்களுக்குப் பிறகு அவர் மனிதப் புனிதராக மாறிவிடுவார். இப்போது அவர் திரிணாமுல் காங்கிரஸில் இருப்பதால்தான் அனைத்தும் நடக்கின்றன” எனக் குறிப்பிட்டார்.
இந்த நிலையில், கைதுசெய்யப்பட்ட பார்த்தா சாட்டர்ஜி விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட போது ஊடகவியலாளர்களைப் பார்த்து, “திட்டமிட்ட சதியால் சிக்க வைக்கப்பட்டிருக்கிறேன். நான் சதிக்குப் பலியாகிவிட்டேன்..!” என சத்தமாகக் கூறினார்.