சென்னை: 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி சென்னை விமான நிலையம் வந்தார்.
44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் இன்று தொடங்கி வரும் ஆகஸ்ட் 10-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்தப் போட்டியின் தொடக்க விழா நேரு விளையாட்டரங்கில் நடைபெறுகிறது. விழாவை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி, குஜராத் மாநிலம் அகமதாபாத்திலிருந்து தனி விமானம் மூலம் சென்னை விமான நிலையத்தை வந்தடைந்தார்.
சென்னை வந்த பிரதமர் மோடியை தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி,கே.என்.நேரு, நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன் ஆகியோர் வரவேற்றனர்.விமான நிலையத்தில் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாஜக சார்பில் வானதி சீனிவாசன் ஆகியோர் வரவேற்றனர்.
சென்னை விமான நிலையத்திலிருந்து ஹெலிகாப்டர் மூலம் அடையாறு ஐஎன்எஸ் கடற்படைத் தளத்திற்கு வரும் பிரதமர் மோடி, அங்கிருந்து சாலை மார்க்கமாக விழா நடைபெறும் நேரு உள் விளையாட்டரங்கத்திற்கு செல்கிறார். வழிநெடுக பிரதமர் மோடிக்கு வரவேற்பு அளிக்க தமிழக பாஜக சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.