குடியரசுத் தலைவரிடம் மன்னிப்பு கோரிய ஆதிர் ரஞ்சன் சவுத்ரி!

மேற்குவங்கத்தைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.பி. ஆதிர் ரஞ்சன் சவுத்ரி டெல்லியில் அண்மையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு குறித்து சர்சைக்குரிய வகையில் பேசியதாக குற்றம் சாட்டப்பட்டது. இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் ஆதிர் ரஞ்சன் சவுத்ரியின் சர்ச்சை கருத்துக்கு பாஜக எம்பிக்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

இந்த விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மன்னிப்பு கோர வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டு வந்தது. ஆனால், வாய்தவறி பேசிவிட்டதாகவும், தான் பேசியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது எனவும் அவைகளிலும் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி தெரிவித்திருந்தார்.

“குடியரசுத் தலைவர் வேட்பாளராக திரவுபதி முர்மு அறிவிக்கப்பட்டது முதல் காங்கிரஸ் கட்சி வெறுப்பை உமிழ்ந்து வருகிறது. காங்கிரஸ் எம்.பி. ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, நாட்டின் மிகஉயர்ந்த பதவியில் இருக்கும் முர்முவை அவதூறாகப் பேசியுள்ளார். வாய்தவறி பேசிவிட்டதாக அவர் மழுப்புகிறார். ஆனால் அவர் வேண்டுமென்றே அநாகரிகமாக பேசியிருக்கிறார். இந்த விவகாரத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும்.” என்று மாநிலங்களவையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வலியுறுத்தினார்.

இந்த நிலையில், குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவிடம் மன்னிப்பு கோரி காங்கிரஸ் எம்.பி. ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கடிதம் எழுதியுள்ளார். அதில், “நான் தாங்கள் வகிக்கும் பதவியை குறிப்பிட தவறான வார்த்தையப் பயன்படுத்தியதற்காக வருத்தம் தெரிவிக்கிறேன். அது நிச்சயமாக வாய்தவறி நடந்த நிகழ்வே என்று தெரிவித்துக் கொள்கிறேன். இருப்பினும் நான் மன்னிப்பு கோருகிறேன். எனது மன்னிப்பை ஏற்றுக் கொள்ள வேண்டுகிறேன்.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.