டெல்லியில் 14,000 சீன கத்திகள் பறிமுதல்: தமிழகம், குஜராத் வாடிக்கையாளர்களிடம் விசாரணை

புதுடெல்லி: டெல்லியில் தடை செய்யப்பட்ட 14,000 சீன கத்திகளை காவல்துறை பறிமுதல் செய்துள்ளது. இவற்றை விலைக்கு வாங்கிய தமிழ்நாடு, ஹைதராபாத் மற்றும் குஜராத் மாநில வாடிக்கையாளர்களிடம் விசாரிக்கவும் காவல்துறை முடிவு செய்துள்ளது.

டெல்லி சித்தரஞ்சன் பூங்கா பகுதி காவல்நிலையத்திற்கு ஒரு ரகசியத் தகவல் போலீஸுக்குக் கிடைத்தது. அதில், இந்தியாவில் தடை செய்யப்பட்ட சீன கத்திகள் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்படுவதாக கூறப்பட்டிருந்தது.

இதனையடுத்து போலீஸார் விசாரணையைத் தொடங்கினர். முதற்கட்ட விசாரணையில் தடை செய்ய அந்தக் கத்திகள் ஆன்லைன் வர்த்தகத்தளங்களின் மூலம் ஆர்டர் செய்து வரவழைக்கப்பட்டு, இறக்குமதி வரி செலுத்தி பெறப்பட்டவை என்பதும் தெரிந்தது.

இதனைத் தொடர்ந்து போலீஸார் அப்பகுதியைச் சேர்ந்த வசீம் மற்றும் நதீம் ஆகியோரை விசாரணை வளையத்திற்குள் கொண்டுவந்தனர். அவர்களிடம் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட 14,000 கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்த கத்திகளை, டெல்லியின் மயாங், ஆஷிஷ் சாவ்லா ஆகியோர் ஆன்லைன் வர்த்தகத்தளங்களில் ஆர்டர் செய்து வாங்கியுள்ளனர். இதுவரை இவர்கள் இருவரும் 19,000 கத்திகளை இருவரும் சீனவிலிருந்து வாங்கியதும் தெரிந்தது. இவர்களிடமிருந்தே வசீம், நதீம் மற்றும் யூசூப் ஆகியோர் வாங்கி தமது ஹைதராபாத், குஜராத் வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்துள்ளனர்.தமிழகத்தில் இருந்தும் பலர் இவர்களிடம் சீன கத்திகளை விலைக்கு வாங்கியது விசாரணையில் தெரிந்துள்ளது.

இவர்கள் அனைவரின் மீதும் டெல்லி போலீஸார் வழக்குகளைப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது குறித்து ’இந்து தமிழ் திசை’ இணையத்திடம் டெல்லி போலீஸ் வட்டாரம், “7.62 அங்குல உயரம் மற்றும் 1.72 சென்டி மீட்டர் அளவுகளுக்கும் அதிகமான கத்திகள் இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளன.

இதனால், அக்கத்திகளை விற்றவர்கள் மீது ஆயுதவழக்குகளின் பிரிவுகளில் விசாரிக்கப்படுகின்றனர். இவர்களிடம் அக்கத்திகளை வாங்கியவர்களின் விலாசங்களையும், கைப்பேசி எண்களையும் கேட்டுள்ளோம். அவர்களிடமும் இதை அவர்கள் வாங்கியதன் காரணம் என்ன எனவும் விசாரணை செய்ய உள்ளோம்” எனத் தெரிவித்துள்ளது.

இதையடுத்து, சீன கத்திகளை இந்தியாவில் விற்பனை செய்த ஆன்லைன் வர்த்தகத்தளங்கள் இரண்டிற்கு டெல்லி போலீஸார் நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்டுள்ளனர். இந்த விளக்கத்திற்கு பின் அந்நிறுவனங்கல் மீதும் வழக்குகள் பதிவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உலோகத்தாலான பளபளக்கும் மிகவும் கூர்மையான இந்த கத்திகள் பார்பதற்கே பயங்கரமாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. இவற்றை திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களிலும் பயன்படுத்த வாங்கியதாகவும் டெல்லி போலீஸாரிடம் சிக்கியவர்கள் தெரிவித்துள்ளனர். எனினும், இவ்வழக்கில் விசாரணைகள் தொடர்கின்றன.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.