தூத்துக்குடி: சிறிய விமானம், 120 படகுகள் – நடுக்கடலில் மாயமான 2 மீனவர்களைத் தேடும் பணி தீவிரம்!

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகில் உள்ளது அமலிநகர் மீனவ கிராமம். இப்பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் தினசரி நள்ளிரவு பைபர் படகில் மீன்பிடித் தொழிலுக்கு சென்று விட்டு அன்று மாலையில் கரை திரும்புவது வழக்கமாக இருந்து வருகிறது. அதேபோல் கடந்த 1-ம் தேதி நள்ளிரவு வழக்கம்போல் மீனவர்கள் மீன்பிடித் தொழிலுக்குச் சென்றுள்ளனர். அன்று மீன்பிடி தொழிலுக்குச் சென்ற படகுகள் மாலையில் கரைக்கு வந்து நிலையில், அதே பகுதியை சேர்ந்த அஸ்வின், பிரசாத், பால்ராஜ், நித்தியானந்தம் ஆகியோர் சென்ற படகு மட்டும் கடலில் வீசிய பலத்த காற்று காரணமாக கவிழ்ந்ததாக கூறப்படுகிறது. இதில் பால்ராஜ், நித்தியானந்தம் ஆகியோர் கடலில் தத்தளித்ததைப் பார்த்த மற்ற மீனவர்கள் காப்பாற்றினர்.

பிரசாத் – அஸ்வின்

அஸ்வின், பிரசாத் ஆகியோரை தேடி பார்த்தும் கிடைக்கவில்லை. மேலும் கடலில் காற்றின் வேகம் அதிக அளவு காணப்பட்டதால் மீட்கப்பட்ட இரண்டு பேரை மட்டும் கரைக்கு அழைத்து வந்தனர். இந்த தகவலறிந்த அமலிநகர் மீனவர்கள் 7 படகில் சுமார் 30-க்கும் மேற்பட்டோர் கடலுக்கு சென்று தேடும் பணியில் தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனால், மாயமான மீனவர்கள் பற்றி எந்த தகவலும் இல்லை. இந்நிலையில், இன்று திருச்செந்தூரைச் சுற்றியுள்ள மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவர்கள், 120 படகுகளில் கடலுக்குள் சென்று மாயமான மீனவர்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மீட்புப்பணி குறித்து தமிழக மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனிடம் பேசினோம், “கடலோர காவல்படைக்கு சொந்தமான 2 கப்பல்கள் மூலமும், சிறிய விமானம் மூலமும் மாயமான மீனவர்களைத் தேடும் பணி நடந்து வருகிறது. ஹெலிகாப்டர் மூலமும் தேடும் பணி முழுவீச்சில் நடந்து வருகிறது. இப்பகுதி மீனவர்களும் பல்வேறு படங்களில் சென்று மீனவர்களை தேடி வருகிறார்கள். காணாமல் போன மீனவர்கள் நல்லபடியாக வீடு திரும்பி வருவார்கள் என நம்பிக்கையுடன் இருக்கிறோம்.

மீனவ சங்கத்தினருடன் ஆலோசனையில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்

நான் இந்த பகுதி மீனவர்களிடம் நேரில் பேசும் போது, எங்கள் பகுதியில் ஏதும் பாதிப்பு ஏற்பட்டால் 2 மணி நேரத்தில் நாங்கள் காப்பாற்றப்பட வேண்டும். அதற்கு வேகமாக செல்லக்கூடிய மீட்புப் படகுகள் தூத்துக்குடி மாவட்டத்தில் நிறுத்தப்பட வேண்டும். அதேபோல் நாங்கள் மீன் பிடித்து கொண்டிருக்கும் போது எந்த இடத்தில் மீன் பிடித்து கொண்டிருக்கிறோம் என கரையிலுள்ள மீனவர்கள் கண்டறியும் வகையில் ’ரேடர் கருவி’ அமைக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர். இது குறித்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.