ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களின் பணிப்புரைக்கு அமைய, கதிர்காமம் எசல பெரஹெரவிற்கு வடகிழக்கில் இருந்து பாதயாத்திரையாக வரும் பக்தர்களுக்கு பாதுகாப்பு, நீர் விநியோகம் உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த 2.04 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பாதயாத்திரையாக வரும் யாத்திரிகர்கள் எதிர்நோக்கும் சிரமங்கள் குறித்து மொனராகலை மாவட்டச் செயலாளர் திரு.குணதாச சமரசிங்க, ஜனாதிபதி அவர்களிடம் தெரிவித்த பின்னர், அதற்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்குமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, அதற்கான வசதிகள் ஜனாதிபதி செயலகத்தின் ஊடாக வழங்கப்படுகின்றன.
வருடாந்த எசல விழாவை முன்னிட்டு, முப்பதாயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் ஒகந்தவில் இருந்து பாதயாத்திரையாக 90 கிலோமீற்றருக்கும் அதிகமான தூரம் நடந்து கதிர்காம பூஜை தளத்திற்கு வருவது காலங்காலமாக இடம்பெற்று வருகின்றது. அந்தப் பயணத்தின் போது பல்வேறு சிரமங்களை அவர்கள் எதிர்கொள்வதுடன், சில சமயங்களில் வன விலங்குகளால் பேரிடர்களையும் எதிர்கொண்டுள்ளனர்.
இது தொடர்பில் அவதானம் செலுத்தி, அந்த பக்தர்களின் பாதுகாப்பு மற்றும் வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்காக செயற்படுமாறு ஜனாதிபதி அவர்கள், உரிய தரப்பினருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
ஜனாதிபதி ஊடகப் பிரிவு
2022-08-05