நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மன்னிப்பு கோரிய தாசில்தார்: மாலை வரை நீதிமன்றத்தில் இருக்க உத்தரவு

சென்னை: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பெண் தாசில்தார் நேரில் ஆஜராகி மன்னிப்பு கோரியதை ஏற்ற சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு, இன்று மாலை வரை தாசில்தார் நீதிமன்றத்தில் இருக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் தாலுகா , கடலாடி கிராமத்தில் பொது பாதை ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி முருகன் என்பவர் வழக்குத் தொடர்ந்து. இந்த வழக்கில், 12 வாரங்களில் மனுதாரரின் கோரிக்கையை பரிசீலித்து தகுந்த உத்தரவை பிறப்பிக்க கடந்த 2017-ம் ஆண்டு டிசம்பரில் உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

இந்த உத்தரவை அமல்படுத்தவில்லை என்று முருகன் தரப்பில் கடந்த 2018-இல் தாக்கல் செய்யப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி அமர்வு, நீதிமன்ற உத்தரவை வேண்டுமென்றே அமல்படுத்தாத சம்பந்தப்பட்ட தாசில்தாரரை குற்றவாளி என அறிவித்தார். மேலும், தண்டனை விபரத்தை அறிவிப்பதற்காக அவரை இன்று (ஆக.5) நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகவும் உத்தரவிட்டிருந்தது.

இந்த உத்தரப்படி பெண் தாசில்தார் லலிதா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வுமுன் இன்று நேரில் ஆஜரானார். நீதிபதிகளிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார். அப்போது அரசு தரப்பிலும், ஆக்கிரமிப்பை 3 வாரங்களில் அகற்றுவதாக உறுதியளிக்கப்பட்டது.

இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், பெண் தாசில்தாரருக்கு கடுமையான தண்டனை விதிக்காமல் இன்று மாலை நீதிமன்ற நேரம் முடியும் வரை பெண் தாசில்தார் நீதிமன்றத்தில் இருக்க வேண்டுமென உத்தரவிட்டனர். மேலும் மூன்று வாரங்களில் ஆக்கிரமிப்பை அகற்றி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று அரசுதரப்புக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.