ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளரிடமிருந்து ஜனாதிபதிக்கு வாழ்த்து

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் (Antonio Guterres)  ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நாடு எதிர்நோக்கியுள்ள தற்போதைய சவால்களை வெற்றிகொள்வதற்கு சாதகமான சூழலையும் ஸ்திரத்தன்மையையும் கட்டியெழுப்புவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களின் தலைமைத்துவம் மிகவும் முக்கியமானதாக அமையும் என பொதுச் செயலாளர் கடந்த (03) ஜனாதிபதி அவர்களுக்கு விடுத்துள்ள விசேட வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

இந்த சவால்களை எதிர்கொள்வதற்கான தேசிய மூலோபாயத்தை வகுப்பதில் அனைத்து அரசியல் கட்சிகளிடையே ஒருமித்த கருத்தை எட்டுவதற்கு ஜனாதிபதி அவர்களின் அர்ப்பணிப்பை ஐ.நா பொதுச்செயலாளர் ஒப்புக்கொண்டுள்ளதோடு, அவ்வாறு செய்யும்போது. பொதுமக்களுடன் கலந்தாலோசித்தல், சட்டத்தின் ஆட்சி மற்றும் அடிப்படை மனித உரிமைக் கோட்பாடுகளுக்கு மதிப்பளித்தல் உட்பட அனைத்து தரப்பினருக்குமிடையில் கலந்துரையாடலை ஊக்குவிப்பதன் முக்கியத்துவமும் எடுத்துக்காட்டப்பட்டுள்ளது.

மேலும், பெண்களின் அரசியல் பங்கேற்புக்கான இலங்கையின் முயற்சிகளை அங்கீகரிப்பதிலும், முன்னேற்றத்தை விரைவுபடுத்துவதற்கு ஜனாதிபதி அவர்களின் தலைமைத்துவத்தை ஊக்குவிப்பதிலும் ஆதரவு தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபை, இலங்கை அரசாங்கத்துக்கும் மக்களுக்கும் உடனடி மற்றும் நீண்டகாலத் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் ஒத்துழைப்பு வழங்கத் தயாராக உள்ளதுடன், அனைத்து இலங்கையர்களுக்கும் சமாதானத்தைக் கட்டியெழுப்புதல்,

நிலையான அபிவிருத்தி மற்றும் மனித உரிமைகளை ஊக்குவித்தல் ஆகியவற்றில் ஐக்கிய நாடுகள் சபையின் ஒத்துழைப்பை தொடர்ந்து பேணுவதற்கு எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு

2022-08-06

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.