நான் ஏன் தலைவன் ஆனேன்? கமல் சொன்ன விளக்கம்!

நடிகர் ரஜினிகாந்த் நீண்ட காலமாகவே அரசியலுக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டு வந்தார். ஆனால் கமலஹாசனோ யாருமே எதிர்பார்க்காத வகையில் திடீரென்று அரசியல் கட்சி தொடங்கி தலைவராகி விட்டார். ஆனால் அவருக்கு அரசியலில் எதிர்பார்த்தபடி வெற்றி கிடைக்காததால் மீண்டும் சினிமாவுக்கு திரும்பியிருக்கிறார். இந்த நிலையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அவர் நடித்த விக்ரம் படம் 400 கோடி வசூலித்து கமலுக்கு சினிமாவில் மிகப்பெரிய கம்பேக் படமாக அமைந்தது.

இதனால் அடுத்தடுத்து புதிய படங்களில் நடிப்பதோடு, தனது ராஜ்கமல் பிலிம்ஸ் சார்பாக பல இளவட்ட நடிகர்களை வைத்தும் படங்கள் தயாரிப்பதிலும் பிஸியாகி இருக்கிறார். இந்த நிலையில், தற்போது விக்ரம் படத்தின் 50வது நாள் கொண்டாட்டம் நடைபெற்று வருகிறது. அதனால் அப்படக்குழுவினர் மீடியாக்களுக்கு பேட்டி கொடுத்து வருகிறார்கள். இந்நிலையில் ஒரு மீடியாவில் கமலஹாசன் கலந்து கொண்டபோது, நான் ஏன் தலைவன் ஆனேன் என்பது குறித்து கூறினார்.

அவர் கூறுகையில், ‛மக்கள் நீதி மய்யம் கட்சி தொடங்கி அரசியலுக்கு வந்தபோது சினிமாவில் மார்க்கெட் இல்லை. அதனால் தான் கமல்ஹாசன் அரசியலுக்கு வந்து விட்டதாக பலர் கூறினார்கள். ஆனால் அவர்கள் தான் வேறு வழி இல்லாமல் அப்படி வந்திருப்பார்கள். தலைவனாக சாக வேண்டும் என்பது முக்கியமல்ல தமிழனாக சாக வேண்டும் என்பதுதான் முக்கியம். என்னைப் பொருத்தவரை சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கும் போது தான் அரசியலுக்கு வந்தேன். நான் நவ அரசியல் கலாச்சாரவாதி, அரசியல்வாதி இல்லை. நீங்கள் எல்லாம் அரசியலுக்கு வரவில்லை என்றால் அரசியல் உங்களை பாதிக்கும். நீங்கள் எந்த கட்சியை சேர்ந்தவர்கள் என்பது முக்கியமல்ல. அந்த கட்சியின் முன்னேற்றத்திற்காக என்ன செய்தீர்கள் என்பது தான் முக்கியம். தொடர்ந்து நீங்கள் விழிப்புணர்வாக இருக்க வேண்டும். ஜனநாயகத்தின் பாதுகாவலர் நீங்கள் தான். மேலும் தலைவன் இல்லை என்றால் நீங்கள் தலைவனாகி விடுங்கள். அதனால்தான் நான் தலைவன் ஆனேன். தகுதியை விட திறமையை விட உணர்வு தான் எனக்கு முக்கியமாக தெரிகிறது' என்று கூறியுள்ளார் கமலஹாசன்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.