புதுச்சேரி | பாஜக கூட்டணியிலிருந்து முதல்வர் வெளியேறக் கோரி திமுக, காங்.,வெளிநடப்பு

புதுச்சேரி: பாஜக கூட்டணியிலிருந்து புதுச்சேரி முதல்வர் வெளியேற வலியுறுத்தியும், பட்ஜெட்டுக்கு நிதி பெற்றுத் தராத ஆளுநர் பதவி விலகக் கோரியும் திமுக – காங்கிரஸ் வெளிநடப்பு செய்தது.

பாஜகவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, பிஹார் முதல்வர் நிதிஷ்குமார் போன்று புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியும் பாஜக கூட்டணியிலிருந்து வெளியேறி பதவி விலக வேண்டுமென சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் சிவா வலியுறுத்தியுள்ளார். நிதி பெற்று தராத தமிழிசையை ஆளுநர் பதவியில் இருந்து விலகக்கோரி திமுக-காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

மத்திய அரசு புதுச்சேரி மாநில பட்ஜெட்டுக்கு இதுவரை அனுமதி வழங்காத நிலையில், புதுச்சேரி சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று துணைநிலை ஆளுநர் உரையுடன் தொடங்கியது.

நிதி பெற்று தராததால் ஆளுநர் பதவியிலிருந்து தமிழிசையை விலகக்கோரி பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்த திமுக, காங்கிரஸ் எம்எல்ஏக்கள்

இந்நிலையில் புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் – பாஜக கூட்டணி அரசு முழு பட்ஜெட்டை தாக்கல் செய்யாததைக் கண்டித்தும், மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்றாததைக் கண்டித்து துணைநிலை ஆளுநர் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டப்பேரவை எதிர்கட்சி தலைவர் சிவா தலைமையில் திமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் நாஜிம், அனிபால் கென்னடி, சம்பத், செந்தில்குமார், நாக தியாகராஜன் மற்றும் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் வைத்தியநாதன், ரமேஷ் பரம்பந்த் உள்ளிட்டோர் பேரவைக்கு கருப்பு சட்டை அணிந்து வந்தனர். பின்னர் துணைநிலை ஆளுநர் உரையை வாசிக்கும் போது அதை எதிர்த்து பேரவையில் கோஷமிட்டனர்.

அதைத்தொடர்ந்து திமுக மற்றும் காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர்கள் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். வெளிநடப்பு செய்தபோது “ஆளுநர் பதவி அரசு பதவியா- கட்சி பதவியா- மத்திய அரசிடமிருந்து நிதி பெற்றுத் தராத ஆளுநரே பதவி விலகு” என கோஷமிட்டனர்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர் இரா.சிவா, “முழு பட்ஜெட் தாக்கல் செய்யாதது, மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்றாதது, புதுச்சேரிக்கு போதிய நிதி பெற்றுத் தராமல், மாநில வளர்ச்சி தடையாக அரசியல் செய்துகொண்டிருக்கும் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசையை கண்டிக்கிறோம், தமிழிசை உடனடியாக ஆளுநர் பதவியிலிருந்து விலகக்கோரி வெளிநடப்பு செய்துள்ளோம்.

கூட்டணியில் இருந்தபோதும் புதுச்சேரி மாநிலத்தை தொடர்ந்து புறக்கணித்து வரும், பாஜகவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, பிஹார் முதல்வர் நிதிஷ்குமார் போன்று, கூட்டணியில் இருந்து புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி பதவி விலக வேண்டும்” என்று குறிப்பிட்டார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.