கடனை திருப்பிக் கேட்டது குத்தமா? அரிவாளுடன் ஓட ஓட துரத்திய தி.மு.க பிரமுகர்; வீடியோ

திருச்சி அருகே கொடுத்த கடனை திரும்ப கேட்டவரை அறிவாளை எடுத்துக்கொண்டு வெட்டத் துரத்திய திமுக ஒன்றிய கவுன்சிலர் நித்தியா கணவரின் வெறிச்செயல் சமூக ஊடகங்களில் வீடியோவாக வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே தளுதாளப்பட்டி ஊராட்சி ஒன்றிய தி.மு.க கவுன்சிலராக இருப்பவர் நித்தியா. இவரது கணவர் வெற்றிச்செல்வன். இவர் இதே பகுதியை சேர்ந்த குணசேகரன் என்பவரிடம் ரூ.2 லட்சம் கடனாக பெற்றுள்ளார். கடன் வாங்கி  பல வருடங்கள் கடந்தும் வெற்றிச்செல்வன் கடனை திருப்பி கொடுக்காமல் அலைக்கழித்து வந்துள்ளார். இதனால் மனவேதனை அடைந்த குணசேகரன், நேற்று வெற்றிச்செல்வன் வீட்டிற்கு சென்று கொடுத்த பணத்தை திரும்பக் கேட்டுள்ளார்.

அப்போது மதுபோதையில் இருந்த வெற்றிச்செல்வன், குணசேகரனை தகாத வார்த்தைகளால் திட்டி வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து குணசேகரனை வெட்ட முயன்றுள்ளார். அதை தடுக்க முயன்றவர்களையும் அரிவாளை எடுத்துக் கொண்டு துரத்தினார். அவர்கள் பயந்து இங்குமங்குமாக ஓடினர். ஆனாலும் விடாமல் அவர்களை துரத்திக் கொண்டே ஓடினார்.  என்னங்க வேண்டாம் என்று அவரது மனைவி தடுத்தபோதிலும் கோபம் கட்டுக்கடங்காத நிலையில் வெற்றிச்செல்வன் அவர்களை வெகு நேரம் துரத்தினார்.

இதனால் அந்த பகுதியில் மிகுந்த பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் வெற்றிச்செல்வன் அரிவாளுடன் ஓடுவதை அங்கிருந்த ஒருவர் தமது மொபைலில் படமாக எடுத்து சமூக ஊடகங்களில் வெளியிட்டார். ஆளும் கட்சி பிரமுகர் வெற்றிச்செல்வன் மீது யாரும் புகார் கொடுக்காத நிலையில் சமூக ஊடகங்களில் வெளியான வீடியோ ஆதாரத்தின் அடிப்படையில் சிறுகனூர் போலீசார் இன்று அதிகாலை வெற்றிச்செல்வனை அவரது வீட்டில் கைது செய்து வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆளும் கட்சி பிரமுகர் ஒருவர் பட்டப்பகலில் அரிவாளுடன் தகாத வார்த்தைகள் பேசி பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் உலா வந்தது தற்போது எதிர்கட்சிக்காரர்களுக்கு லட்டு சாப்பிட்ட மாதிரியாகியிருக்கின்றது. சின்ன சின்ன துரும்பையும் அரசியலாக்க நினைத்திருக்கும் எதிர்கட்சியினர் இந்த சம்பவத்தை பெரிய லெவலுக்கு வச்சு செய்யப்போறாங்களாம்.

செய்தி : க.சண்முகவடிவேல்

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.