வெளிநாட்டு டி20 தொடர்களில் இந்திய வீரர்கள் பங்கேற்க தடை : பிசிசிஐ அதிரடி

மும்பை,

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் டி20 லீக்கில் மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் முதலீடு செய்துள்ளன. தொடர்ந்து அடுத்த ஆண்டு ஜனவரி, பிப்ரவரியில் தென் ஆப்பிரிக்காவில் நடக்க உள்ள 20 ஓவர் லீக் கிரிக்கெட் போட்டிக்கான 6 அணிகளையும் இந்தியாவை சேர்ந்த ஐ.பி.எல். கிரிக்கெட் அணிகளின் உரிமையாளர்கள் வாங்கியுள்ளனர்.

அந்த வகையில் ஜோகனஸ்பர்க்கை அடிப்படையாக கொண்டு உதயமாகும் அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் வாங்கியுள்ளது. இதே போல் கேப்டவுன் அணி, மும்பை இந்தியன்சுக்கும், டர்பன் அணி லக்னோ சூப்பர் ஜெயன்ட்சுக்கும், செயின்ட் ஜார்ஜ் பார்க் அணி ஐதராபாத் சன்ரைசர்சுக்கும், பார்ல் அணி ராஜஸ்தான் ராயல்சுக்கும், பிரிட்டோரியா அணி டெல்லி கேப்பிட்டல்சும் வாங்கியுள்ளது.

இந்நிலையில் எந்த ஒரு இந்திய வீரரும் அவர்களின் அனைத்து விதமான கிரிக்கெட்டுகளில் இருந்தும் ஓய்வு பெறுவதற்கு முன்னர் எந்த ஒரு வெளிநாட்டு டி20 லீக்குகளிலும் பங்கேற்கவோ அல்லது வழிகாட்டவோ கூடாது என்ற அறிவிப்பை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.

இதன்படி ஒப்பந்தம் செய்யப்பட்ட அல்லது ஓய்வுபெற்ற மற்றும் ஐபிஎல்லில் விளையாடும் எந்த இந்திய வீரரும், தென்னாப்பிரிக்கா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெற உள்ள டி20 லீக்குகளில் இடம்பெற இந்திய கிரிக்கெட் வாரியத்தால் அனுமதிக்கப்பட மாட்டார்கள். ஐபிஎல்லில் விளையாடும் எவரும் இந்த வெளிநாட்டு லீக்குகளில் வழிகாட்டியாக கூட இருக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அவர்கள் பங்கேற்க விரும்பினால் அவர்கள் பிசிசிஐ உடனான அனைத்து உறவுகள் மற்றும் காண்ட்ராக்ட்டுகளை முறித்து கொள்ள வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.