கட்கரி வெளியே, பட்னாவிஸ் உள்ளே: பாஜக உயர்மட்ட குழுவில் எடியூரப்பா, வானதி.. முழு விவரம்!

பாரதிய ஜனதா கட்சியின் அதிமுக்கியத்துவம் வாய்ந்த மத்திய தேர்தல் குழு புதன்கிழமை (ஆகஸ்ட் 17) சீரமைக்கப்பட்டது. இந்தக் குழுவில் இருந்து மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, மத்தியப் பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சௌகான் உள்ளிட்டோர் நீக்கப்பட்டனர்.

பாரதிய ஜனதா கட்சியின் உச்ச முடிவெடுக்கும் அமைப்பாக இந்த மத்திய தேர்தல் குழு உள்ளது. 11 உறுப்பினர்கள் கொண்ட இக்குழுவில் தற்போது 6 புதுமுகங்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி கர்நாடக முன்னாள் முதலமைச்சர் பி.எஸ். ஏடியூரப்பா, முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி இக்பால் சிங் லால்புரா, மத்திய அமைச்சர் சர்பானந்த சோனாவால், இதர பிற்படுத்தப்பட்டோர் சமூக தலைவர் கே லட்சுமணன், முன்னாள் எம்பி சுதா யாதவ், முன்னாள் மத்திய அமைச்சர் சத்யநாராயணன் ஜாதியா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

“கட்சி 2024 மக்களவை தேர்தலுக்கு ஆயத்தமாகி இருப்பதை இது காட்டுகிறது” என பாஜக நிர்வாகி ஒருவர் தெரிவித்தார். இதில் முக்கியமாக கட்சியின் வாரியம் மற்றும் தேர்தல் பொதுக்குழு ஆகிய இரண்டு அதிமுக்கியத்துவம் வாய்ந்த பொறுப்புகளில் இருந்து நிதின் கட்கரி விடுவிக்கப்பட்டுள்ளார்.
அவரது பொதுக்கருத்துகளை எதிர்க்கட்சிகள் விமர்சனமாக முன்வைத்து வந்துள்ள நிலையில் இது நடந்துள்ளது. கடந்த மாதம் நாக்பூரில் நடந்த விழாயொன்றில் பேசிய நிதின் கட்கரி, ‘அண்ணல் காந்தியடிகள் காலத்தில் இருந்தே அரசியல் இருந்துவருகிறது.

பின்னர், அதன் கவனம் தேசத்தைக் கட்டியெழுப்புதல் மற்றும் அபிவிருத்தி என்ற இலக்கை நோக்கி நகர்ந்தது. இன்று நாம் பார்ப்பது 100 சதவீதம் அதிகாரத்தில் நீடிப்பது மட்டுமே. அரசியல் என்பது சமூக மற்றும் பொருளாதார சீர்திருத்தத்திற்கான உண்மையான வழிமுறையாகும், எனவே இன்றைய அரசியல்வாதிகள் சமூகத்தில் கல்வி, கலை போன்றவற்றின் வளர்ச்சிக்காக பாடுபட வேண்டும்’ என்றார்.

மேலும் எடியூரப்பா மற்றும் ஜாதியா உள்ளிட்ட தலைவர்கள் ஏற்கனவே வாரியத்தில் பதவி வகித்துள்ளனர். இவர்கள் இருவரும் வயது மற்றும் அனுபவத்திலும் மூத்தவர்கள் ஆவார்கள்.
இதற்கிடையில் பாஜக தேர்தல் குழுவில் புதியவர்களுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மத்திய அமைச்சர் பூபேந்திர யாதவ், மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ், எம்.எல்.ஏ, வானதி சீனிவாசன், முன்னாள் எம்பி ஓம் மாத்தூர் ஆகியோருக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்தக் குழுவில் உள்ளவர்கள் சமூகம் மற்றும் பிராந்தியம் ரீதியாகவும் முக்கியத்துவம் பெற்றவர்களாக உள்ளனர். அதாவது ஜாதியா பட்டியல் இனத்தை சேர்ந்தவர் ஆவார்.
லால்புரா சீக்கிய சமூகத்தையும், லட்சுமணன் ஓபிசி சமூகத்தையும் சோனாவால் அஸ்ஸாம் பழங்குடி இனத்தை சேர்ந்தவர் ஆவார். பாரதிய ஜனதா தேசியக் குழுவில் வடகிழக்கு மாநிலத்தை சேர்ந்தவர் ஒருவர் இடம்பெறுவது இதுவே முதல் முறை ஆகும்.
இது வடகிழக்கு மாநிலங்களில் பாரதிய ஜனதா பெற்றுள்ள வெற்றி மற்றும் அம்மாநிலங்களுக்கு அளிக்கும் முக்கியத்துவம் ஆகியவற்றை குறிக்கிறது என கட்சி நிர்வாகி ஒருவர் கூறினார்.
ஏடியூரப்பாவுக்கு அளிக்கப்பட்ட அங்கீகாரம் அடுத்த ஆண்டு மாநிலத்தில் நடக்கும் சட்டப்பேரவை தேர்தலுக்கான முன்னோட்டம் என்பது தெளிவான சமிக்ஞை ஆகும்.
மேலும் 2014 ஆம் ஆண்டு எடியூரப்பா பார்லிமெண்ட் போர்டில் தலைவராக இருந்த அனுபவமிக்கவர் ஆவார். இந்தக் குழுவில் மறைந்த தலைவர்களான அருண் ஜெட்லி, சுஷ்மா சுவராஜ் மற்றும் அனந்த் குமார் ஆகியோரும் அங்கம் வகித்துள்ளனர்.
இது குறித்து நிர்வாகி ஒருவர் கூறுகையில், “பாரதிய ஜனதா மூத்த தலைவர்களுக்கு பெரும் மரியாதை வழங்குகிறது. பி.எஸ் எடியூரப்பா, ஜாதியா உள்ளிட்டோர் பெரு மரியாதைக்குரியவர்கள். அவர்கள் கட்சியை கீழ்மட்டத்தில் இருந்து செங்கல் செங்கலாக கட்டமைத்தவர்கள் என்றார்.

கட்சியின் உயர் மட்ட குழுவில் உள்ள சுதா யாதவ், கார்கில் போரின்போது கணவரை இழந்தவர் ஆவார். இவர் 1999 மக்களவை தேர்தலில் ஹரியானா மாநிலத்தில் உள்ள மகேந்திரகர் தொகுதியில் இருந்து தேர்வானார். எனினும் 2004 மற்றும் 2009ஆம் தேர்தல்களில் அவர் தோல்வியை தழுவினார்.

இதற்கிடையில் கட்கரி நீக்கப்பட்டதற்கு தேசியவாத காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது. கட்கரி சாமர்த்தியமான அரசியல்வாதியாக உயர்ந்து வருவதால் அவர் நீக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் க்ளைட் கிரெஸ்டோ விமர்சித்துள்ளார்.
மேலும், ‘உங்களின் திறமை அவர்களுக்கு சவாலாக உள்ளது. கறை படிந்தவர்களை மேம்படுத்த உங்களை நீக்கியுள்ளனர் என்றார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.