வாக்காளர்கள் இலவச திட்டங்களை பெறுவதை விட கண்ணியமாக வருவாய் ஈட்டவே விரும்புவார்கள் – உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கருத்து

புதுடெல்லி: இலவசங்களுக்கு பதில் கண்ணியமாக வருவாய் ஈட்டக்கூடிய நலத்திட்டங்களை வாக்காளர்கள் விரும்புவார்கள் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

அரசியல் கட்சிகள் தேர்தலின் போது அர்த்தமற்ற இலவச வாக்குறுதிகளை வழங்கி வாக்கு சேகரிப்பதைத் தடுக்க வலியுறுத்தி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது. மாநில அரசுகள் ஏற்கெனவே கடனில் தத்தளித்து வரும் நிலையில், இதுபோன்ற வாக்குறுதிகளை நிறைவேற்ற மேலும் கடன் வாங்க வேண்டி இருப்பதாக மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள் கூறியதாவது: வாக்காளர்களுக்கு வாய்ப்பு வழங்கினால் இலவசங்களை விட கண்ணியமான வருவாய் ஈட்டக்கூடிய நலத் திட்டங் களைத்தான் தேர்ந்தெடுப்பார்கள். உதாரணமாக, மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டம் ஏழைகளுக்கு கண்ணியமான வருமானத்தை வழங்குகிறது. எனவே, வாக்குறுதிகள் மட்டுமே தேர்தல் முடிவுகளை தீர்மானிக்காது. இலவச வாக்குறுதிகள் வழங்கிய கட்சிகள் தேர்தலில் தோற்றதை பார்த்திருக்கிறோம்.

அரசியல் கட்சிகள் தேர்தல் வாக்குறுதி வழங்குவதைத் தடுக்க முடியாது. ஆனால், எவையெல்லாம் அர்த்தமுள்ள வாக்குறுதிகள் என்பதுதான் கேள்வியாக உள்ளது. தண்ணீர், சில யூனிட் மின்சாரம் ஆகியவற்றை இலவசம் என கருத முடியுமா? மின்னணு சாதனங்கள் உள்ளிட்ட நுகர் பொருட்களை நலத்திட்டம் என்ற பெயரில் இலவசமாக வழங்கலாமா? இதுபோன்ற கேள்விகளுக்கு விடை காண வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

திமுக சார்பில் மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில், “சமூகத்தில் நிலவும் ஏற்றத்தாழ்வை குறைப்பதற்காக நலத்திட்டங்களை அமல்படுத்த, அரசியல் சாசன சட்டத்தின் 38-வது பிரிவு மாநில அரசுகளுக்கு அதிகாரம் வழங்கி உள்ளது. எனவே, இலவசங்களை தவறாக புரிந்து கொள்ளக்கூடாது” என்று கூறப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.