தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: பதறவைத்த இறுதி அறிக்கை… சிக்கிக் கொண்ட 17 போலீசார்!

தூத்துக்குடி என்றாலே துப்பாக்கிச்சூடு என்று நினைவுக்கு வரும் அளவிற்கு வரலாற்றில் அழியாத கறை படிந்துவிட்டது. தூத்துக்குடியில் செயல்பட்டு வந்த ஸ்டெர்லைட் ஆலை சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் என்று குற்றம்சாட்டி அப்பகுதி மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்த அமைதி போராட்டம் 2018 மே 22ஆம் தேதி அன்று 100வது நாளை எட்டிய நிலையில் யாரும் எதிர்பார்த்திராத கோர சம்பவம் அரங்கேறியது.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த பொதுமக்கள் சென்று கொண்டிருக்கையில் போலீசார் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினர். அதில் 12ஆம் வகுப்பு மாணவி ஸ்னோலின் உட்பட 13 பேர் கொல்லப்பட்டனர். 100க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். அதன்பின்னர் ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைக்கப்பட்டாலும், உயிர் தியாகம் செய்த பொதுமக்களுக்கு இன்னும் நீதி கிடைத்தபாடில்லை.

இதற்கிடையில் ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் தமிழக அரசு விசாரணை ஆணையம் அமைத்தது. இந்த ஆணையம் தொடர் விசாரணை நடத்தி தங்கள் அறிக்கையை முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் சமர்பித்துள்ளது. அதில் பல்வேறு திடுக்கிடும் விஷயங்கள் தெரியவந்துள்ளன. அதில்,

* எந்தவிதமான அதிரடி நடவடிக்கையும் எடுக்க வேண்டிய சூழல் ஏற்படாத நிலையிலும் போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இதற்காக எந்தவித முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் போலீசார் கையாளவில்லை.

* வன்முறை நிகழ்வுகளை தடுக்கவே துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக போலீஸ் தரப்பு விளக்கம் அளித்திருந்தது. ஆனால் அதற்கான எந்த முகாந்திரமும் இல்லை.

* துப்பாக்கி குண்டுகள் எந்த திசையில் இருந்து வருகிறது என தெரியாமல் போராட்டக்காரர்கள் சிதறி ஓடியுள்ளனர். அதாவது குருவிகளை சுடுவது போல் சுட்டு தள்ளியுள்ளனர்.

* அதிலும் தொலைதூரத்தில் இருந்து குறி பார்த்து சுடக்கூடிய துப்பாக்கிகளை பயன்படுத்தி இருக்கின்றனர்.

* தப்பியோடிய போராட்டக்காரர்களின் பின்னந்தலை வழியாக குண்டுகள் ஊடுருவி செல்லும் வகையில் சுட்டுள்ளனர். ஏனெனில் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த 13 பேரில் 6 பேர் பின்னந்தலையில் சுடப்பட்டு இறந்துள்ளனர்.

* இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் எந்தவொரு போலீசாருக்கும் படுகாயங்கள் ஏற்படவில்லை.

* தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு விஷயத்தில் மாவட்ட ஆட்சியர் அலட்சியமாக நடந்திருக்கிறார். எந்தவித யோசனையும் செய்யாமல் முடிவெடுத்துள்ளார். அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

* மொத்தம் 17 போலீசார் மீது குற்றவியல் மற்றும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

சிக்கும் போலீசார்

* தென் மண்டல ஐஜி ஷைலேஷ் குமார் யாதவ் (தற்போது போலீஸ் நலத்துறை ஏடிஜிபி-யாக இருக்கிறார்)

* துணை ஐஜி (திருநெல்வேலி சரகம்) கபில் குமார் சி.சிர்கார் (தற்போது சென்னை மாநகரின் கூடுதல் கமிஷராக இருக்கிறார்)

* தூத்துக்குடி எஸ்.பி பி.மகேந்திரன் (தற்போது சென்னை மாநகர துணை ஆணையராக (நிர்வாகம்) இருக்கிறார்)

* துணை எஸ்.பி லிங்க திருமாறன்

* மூன்று காவல் ஆய்வாளர்கள்

* இரண்டு துணை காவல் ஆய்வாளர்கள்

* ஒரு ஹெட் கான்ஸ்டபிள்

* 7 கான்ஸ்டபிள் என 17 பேர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு அருணா ஜெகதீசன் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.