வாரிசு முடிஞ்சு.. தளபதி 67 ஆரம்பம்; வெளியான புகைப்படம்

வாரிசு படத்துக்குப் பிறகு தளபதி விஜய், லோகேஷ் கனகராஜூடன் மீண்டும் கூட்டணி அமைக்க இருக்கிறார். இந்தப் படத்துக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை என்றாலும், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அதற்கான பணிகளில் மும்முரமாக கவனம் செலுத்தி வருகிறார். சில பேட்டிகளில் கூட, தயாரிப்பு நிறுவனம் கூறும் வரை பொறுமையாக இருக்க வேண்டும் என கூறினாரே தவிர, வேறு எதுவும் சொல்லவில்லை. மற்றொரு நிகழ்வில் பங்கேற்கும்போது அவரிடம் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த லோகேஷ் கனகராஜ், தன்னுடைய அடுத்த படம் கேங்ஸ்டர் படமாக இருக்கும் என தெரிவித்தார். இதன் மூலம் தளபதி 67 படம் கேங்ஸ்டர் படமாக இருக்கும் என ரசிகர்கள் யூகிக்கத் தொடங்கியுள்ளனர். 

நடிகர் விஜயும் தற்போது வம்சி பைடிபல்லி இயக்கத்தில் உருவாகிக் கொண்டிருக்கும் ‘வாரிசு’ படத்தின் சூட்டிங்கில் பிஸியாக இருக்கிறார். ராஷ்மிகா மந்தனா, சரத்குமார் மற்றும் பிரகாஷ் ராஜ், பிரபு உள்ளிட்ட திரைநட்சத்திரங்கள் நடிக்கும் இந்தப் படத்தில் சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பெரும்பாலான படப்பிடிப்பு பணிகள் முடிந்துவிட்டதாக கூறப்படுகிறது. அண்மையில் விசாகப்பட்டனத்தில் சூட்டிங் நடைபெற்றது. ஹார்பரில் சண்டைக்காட்சிகள் படமாக்கப்பட்ட நிலையில், அதுதொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் லீக்கானது. மேலும், மருத்துவமனை ஒன்றில் எடுக்கப்பட்ட காட்சிகளும் லீக்கானது.

இது வாரிசு படக்குழுவுக்கு பெரும் அதிர்ச்சியைக்கொடுத்தது. இதனைத் தொடர்ந்து சூட்டிங் ஸ்பாட்டில் கெடுபிடிகள் கடுமையாக்கப்பட்டன. தற்போது இறுதிக்கட்ட படப்பிடிப்புகள் சென்று கொண்டிருக்கும் அதேவேளையில், அடுத்தப் படத்திற்கான பணிகளிலும் கவனம் செலுத்த தொடங்கிவிட்டாராம் விஜய். இதற்காக லோகேஷ் கனராஜ் உள்ளிட்ட படக்குழுவினரை சந்தித்து கலகலப்பாக உரையாடி இருக்கிறார். விக்ரம் படம் வெற்றி பெற்றிருப்பதால், அதனைவிட திரைக்கதை வெயிட்டாக இருக்குமாறு அறிவுறுத்தியிருக்கிறாராம். தற்போது, அந்த உரையாடலின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை லோகேஷ் கனகராஜ் வெளியிட்டிருக்கிறார். வாரிசு படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டவுடன், தளபதி 67 படத்திற்கான அறிவிப்புகள் வெளியாகும் என கூறப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.