வேட்டையில் சூரப்புலி மோடிக்கு பாதுகாப்பு தரும் கர்நாடகா நாய்

புதுடெல்லி: பிரதமர் மோடிக்கு பாதுகாப்பு அளிக்கும் தேசிய சிறப்பு பாதுகாப்பு படையில் கர்நாடகாவை சேர்ந்த 2 முதோல் இன நாய்கள் சேர்க்கப்பட்டுள்ளன. கர்நாடக மாநிலம், திம்மாபுராவில் நாய்கள் ஆராய்ச்சி மையம் செயல்பட்டு வருகிறது. பிரதமர் மோடிக்கு பாதுகாப்பு அளிக்கும் தேசிய சிறப்பு பாதுகாப்பு படையை சேர்ந்த 2 மருத்துவர்கள், வீரர்கள் இந்த மையத்துக்கு சமீபத்தில் வந்து பார்வையிட்டனர். பின்னர், கடந்த ஏப்ரல் 25ம் தேதி இங்கிருந்து 2 முதோல் இன நாய்க்குட்டிகளை எடுத்து சென்றனர். மோடியின் பாதுகாப்பு படைப் பிரிவில் இவை பயன்படுத்தப்பட உள்ளன. 2 மாத குட்டிகளாக இருந்த இவற்றுக்கு ஏற்கனவே பயிற்சிகள் தொடங்கப்பட்டு விட்டது. முதலில் 4 மாத பயிற்சியும், பின்னர், கடுமையான பயிற்சிகளும் இவற்றுக்கு அளிக்கப்படும்.

பிரதமர் மோடியின் பாதுகாப்பு படைப்பிரிவில் தமிழகத்தை சேர்ந்த ராஜபாளையம், உத்தரப் பிரதேசத்தின் ராம்பூர் கிரேஹவுண்ட் இனங்களை சேர்க்க பரிசீலனை செய்யப்பட்டது. பின்னர், முதோல் இனத்தின் செயல்பாடு நன்றாக இருப்பதால், இது தேர்வு செய்யப்பட்டுள்ளது. இவை அரசர்கள் காலத்தில் இருந்து வேட்டைக்காக பயன்படுத்தப்பட்டு வரப்படுகிறது. பிரதமரின் பாதுகாப்பு பிரிவில் முதன் முதலாக உள்ளூர் இன வேட்டை நாய்கள் சேர்க்கப்பட்டு இருப்பது இதுவே முதல்முறை.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.