3500 கிலோ வெடி பொருள்கள்… தகர்க்க தயாராகும் நொய்டா இரட்டைக் கோபுரங்கள்

நொய்டாவில் உள்ள சூப்பர் டெக்ஸ் என்ற பிரமாண்ட இரட்டை கோபுரங்கள் வரும் 28ஆம் தேதி வெடி வைத்து தகர்க்கப்பட உள்ளது.

உத்தரப் பிரதேசம் மாநிலம் நொய்டாவில் ‘சூப்பர் டெக்ஸ்’ என்ற பிரமாண்ட இரட்டை கோபுரங்கள் உள்ளன. இதில் ‘அபெக்ஸ்’ என்ற கட்டடம் 32 மாடிகளுடன் 328 அடி உயரமும், ‘செயான்’ என்ற கட்டடம் 31 மாடிகளுடன் 318 அடி உயரமும் உடையது.
இந்த இரண்டு கோபுரங்களும் விதிமுறைகளை மீறி கட்டப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து, கட்டடங்களை இடிக்க உச்சநீதிமன்றம் கடந்த ஆண்டு உத்தரவிட்டது.

இதையடுத்து இந்த இரட்டைக் கோபுரங்கள் ஆகஸ்ட் 28ஆம் தேதி பிற்பகல் 2.30 மணிக்கு வெடிபொருள் வைத்து தகர்க்கப்படவிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கட்டிடங்களை முழுமையாக ஆய்வு செய்து இடிப்பதற்கான வரைபடம் தயாராகி உள்ளது. இந்த இரட்டைக் கோபுரங்களைத் தகர்க்க சுமார் 3,500 கிலோ கிராம் எடையுள்ள வெடிபொருள்கள், கட்டடத்தின் அடித்தளம் முதல் தூண்கள் வரை 9,400 துளைகளில் நிரப்பப்படவிருக்கிறது. இதனை வெடிக்கச் செய்வதன் மூலம், இரட்டைக் கோபுரங்களும் தரைமட்டமாகும். வெடிபொருள் நிரப்பும் முதல் குழு நொய்டாவை வந்தடைந்துள்ளது.

image
கட்டிடத்திற்கு அருகிலுள்ள பகுதிகளில் வசிப்பவர்கள் ஆகஸ்ட் 28ஆம் தேதி காலை 7 மணிக்குள் வீடுகளை காலி செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அதே நாளில் மாலை 4 மணிக்குப் பிறகுதான் வீடு திரும்ப வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இந்தக் கட்டடத்துக்குள் வெளியாட்கள் யாரும் உள்ளே நுழைய முடியாத அளவுக்கு பலத்த போலீஸ்  பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது. இந்த கட்டடத்தின் முன் பகுதியிலிருக்கும் 500 மீட்டர் சாலை, பொதுப் போக்குவரத்துக்கு அனுமதிக்கப்படாமல் மூடப்பட்டுள்ளது.

கட்டடத்தை இடித்துத் தள்ளுவதில் ஏதேனும் தொழில்நுட்ப அல்லது வானிலை மாறுபாடு போன்றவை காரணமாக இருந்தால் இடித்துத் தள்ளும் பணியை செப்டம்பர் 4ஆம் தேதிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொந்தரவு – முக்கிய ஆவணங்கள் மாயம்; ஓய்வு வழக்கறிஞர் விளக்கம்

 Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.