தூர நோக்குடன் செயற்படும் தலைவரான ரணில் விக்கிரமசிங்க அவர்களால் நாட்டைக் கட்டியெழுப்ப  முடியும் – மிஹிந்தலை ரஜமஹா விஹாராதிபதி  தேரர் தெரிவிப்பு

தூர நோக்குடன் செயற்படும் தலைவர் என்ற வகையில் இந்த நாட்டின் பொறுப்பை ஏற்றுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள், நிச்சயம் நாட்டைக் கட்டியெழுப்புவார் என மிஹிந்தலை ரஜமஹா விகாரையின் விகாராதிபதி கலாநிதி வண. வலவாஹெங்குனவெவே தம்மரதன நாயக்க தேரர் தெரிவித்துள்ளார்.

 “ஒரு விடயம் நடக்கவேண்டுமாயின்  தகுதியானவர்களுக்கே அது வழங்கப்பட வேண்டும்” என்ற வார்த்தைகளை உறுதிப்படுத்தும் வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள், இன்று இந்நாட்டின் காவலராக மாறி நாட்டைக் கட்டியெழுப்பும் பொறுப்பை சுமந்து வருவதாகக் குறிப்பிட்டார்.

இன்று (21) முற்பகல் மிஹிந்தலை புனிதத் தளத்துக்கு விஜயம் செய்த ஜனாதிபதி அவர்கள் சமய வழிபாடுகளில் ஈடுபட்டு ஆசிர்வாதங்களைப் பெற்றுக்கொண்டார். மேலும் விகாராதிபதி கலாநிதி வண. வலவாஹெங்குனவெவே தம்மரதன நாயக்க தேரரை சந்தித்து நலம் விசாரித்த போதே தேரர் இவ்வாறு தெரிவித்தார்.

மகா சங்கத்தினர்  பிரித் பாராயணம் செய்து ஜனாதிபதிக்கு ஆசி வழங்கியதுடன், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களுக்கு “மிஹிந்தலா நினைவுச் சின்னமும்” வழங்கி வைக்கப்பட்டது .

இங்கு அனுசாசன உரை நிகழ்த்திய கலாநிதி வண. வலவாஹெங்குனவெவே தம்மரதன நாயக்க தேரர்,

“தர்மாசோக மன்னரின் மூத்த மகனாகிய மிஹிது மகா தேரருக்கும், இலங்கையை ஆண்ட தேவநம்பியதிஸ்ஸ மன்னனுக்கும் இடையே 2330 ஆண்டுகளுக்கு முன்பு முதலாவது இராஜதந்திர சந்திப்பு இந்த மிஹிந்தலை புனிதத் தளத்தில் நடந்ததாகக் கூறப்படுகிறது. இங்குதான் அறங்காவலர் கருத்தியல் அறிமுகப்படுத்தப்பட்டது. “உன் விருப்பப்படி வேட்டையாட முடியாது. தரையிலும், நீரிலும், காற்றிலும் உள்ள விலங்குகளைக் கொல்லாதீர்கள்.” அங்கு மத வேறுபாடு இல்லை.

இன வேறுபாடு இல்லை. கட்சி, நிற பேதமில்லை. அனைவரும் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற அறங்காவலர் கருத்தியல் மாத்திரமே அங்கு இருந்தது. அது மட்டுமன்றி, இந்த பூமியில் உள்ள இலைகள், மரங்கள் முதல் அனைத்தையும் பாதுகாக்கும் பொறுப்பு, பாதுகாவலருக்கு அல்லது ஆட்சி புரிபவருக்கு உள்ளது என்று மிஹிது மஹா தேரர் அன்று போதித்தார். 2330 வருடங்களின் பின்னர் அதேபோன்று, இந்த நாட்டைப் பொறுப்பேற்று, பாதுகாப்பதற்காக ஆசிகளைப் பெற்றுக்கொள்ள எமது ஜனாதிபதி, இங்கு வருகை தந்துள்ளமை எமக்கு மகிழ்ச்சியளிக்கிறது. அவரை ஆசிர்வதிக்கிறோம்.

“ஒரு விடயம் நடக்கவேண்டுமாயின்  தகுதியானவர்களுக்கே அது வழங்கப்பட வேண்டும்” என்று ஹுனுவடயே கதையில் கூறப்படுகிறது. அன்று பல ஊடகங்களும் அரசியல்வாதிகளும் உங்களின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தினர். தெற்கே போய் பயங்கரவாதி என்கிறார்கள், நாட்டை ஆட்சி செய்த ஆட்சியாளர்களே அவ்வாறு கூறினார்கள். அதேபோன்று, பல அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்கள் இருந்தன. “ரணிலால் முடியாது” என்று கூறிய அந்தக் கருத்தை “ரணிலுக்கு ஜனாதிபதி பதவி வழங்க வேண்டும்” என்று கூறி, அன்று நமது மங்கள சமரவீர அதனைத் திருத்தி முன்வைத்தார். இவரைப்போலவே ஸ்ரீபதி சூரியஆரச்சி உட்பட இன்னும் பலர் இருக்கிறார்கள்.

இரண்டு அல்லது மூன்று யுத்தங்கள் இருந்ததை நாங்கள் அறிவோம். 1989 கலவரம், எல்.ரீ.ரீ.ஈ ஒரு பக்கம், இன்னொரு பக்கம் மக்கள் விடுதலை முன்னணி(ஜே.வி.பி) என்பன செயற்பட்டன. டிரான்ஸ்போமர்கள், தொழிற்சாலைகள் அனைத்தும் தீப்பிடித்து எரிந்தன. மறுபுறம் குண்டுகள் வெடித்தன. ஆனால் அந்த நேரத்தில் கூட, நாடு இத்தகைய அழுத்தங்களுக்கோ, இவ்வளவு கடினமான சூழ்நிலைக்கோ தள்ளப்படவில்லை.

இன்று, ஒரு பக்கம், கொரோனா தொற்று, மறுபக்கம், அரசியல் ஸ்திரமின்மை. அதே போல் இனவாதம், மதவாதம் அனைத்தும் உள்ளன.  நாடு இருந்தாலும், இறுதியில் நாட்டில் சட்டம் இல்லாமல் போனதை நாம் அறிவோம். பொலிஸாரின் வாகனங்களை போதைப்பொருள் பயன்படுத்தியவர்கள் சோதனை செய்கின்றனர். சட்டத்தை தனி நபர்கள் கையில் எடுத்தனர். பொலிஸாரை அடிக்க ஆரம்பித்தனர். ஆயுதங்கள் திருடப்பட்டன. இதுபோன்ற பல்வேறு விடயங்களைச் செய்தார்கள்.

இறுதியில், ஒரு வரம் போல் இந்த நாட்டிற்கு நல்லது செய்ய முன் வந்தீர்கள். உங்கள் வீடு கூட ரோயல் கல்லூரிக்கு எழுதப்பட்டுள்ளது. உலகத்திலோ அல்லது இலங்கையிலோ உங்களுக்கு வேறு ஒரு அங்குல நிலம் கூட இல்லை. இருந்தவையும் பல்கலைக்கழகங்களுக்கும் நிறுவனங்களுக்கும் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளன. அப்படிப்பட்ட ஒரு தன்னலமற்ற குணம் கொண்டவர் தான் நமது ரணில் விக்கிரமசிங்க அவர்கள்.

கடந்த காலங்களில் அவர் கூறியவற்றை மக்கள் ஏளனமாகப் பேசினர். நகைப்புக்கு உள்ளாக்கினர். ஆனால் கடைசியில், இந்த கடினமான நேரத்தில்  புகையிரதத்திற்கு தலையை வைத்தது போல ஒரு செயலைச் செய்ய வேண்டியதாயிற்று. பிரதமர் பதவியை ஏற்றார், ஜனாதிபதி பதவியை ஏற்றுக்கொண்டார். ஏனையோருக்கும் ஜனாதிபதிப் பதவியை ஏற்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டது. ஆனால் யாரும் ஏற்க முன்வரவில்லை.

என்ன கூறினாலும் கடைசியில் அரச பதவியைப் பெறுவதற்கும் புண்ணியம் செய்திருக்க வேண்டும். இந்த நாட்டைப் பொறுப்பேற்கவும், இந்த மாபெரும் புனித பொக்கிஷங்களுக்கு பொறுப்பாக இருப்பதற்கும், பல்வேறு மதங்கள் மற்றும் வெவ்வேறு இனங்கள் அனைத்தையும் பொறுப்பேற்கக் கிடைப்பதும் ஒரு அதிர்ஷ்டம் ஆகும்.

மேலும், நீங்கள் அரச தலைவர் ஆவதற்கு முன்னரே சிறுவயது முதலே இந்த மிஹிந்தலை ஒளிவிளக்குப் பூஜையில் பங்குபற்றுகின்றீர்கள். மேலும், நீங்கள் ஒரு பிரதமராக, பல சந்தர்ப்பங்களில் இந்த இடத்திற்கு வருகை தந்து பல பூஜைகளில் பங்கேற்றவர். அரச பதவியை ஏற்ற பிறகும் நீங்கள் அதை மறக்கவில்லை” என்றும் தெரிவித்தார்.

முன்னாள் அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான எஸ்.எம். சந்திரசேன, துமிந்த திஸாநாயக்க, ஷெஹான் சேமசிங்க, ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியும் தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகருமான சாகல ரத்நாயக்க, முன்னாள் அமைச்சர்களான தயா கமகே, அனோமா கமகே உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு

2022-08-21

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.