பசுவை கொன்ற 5 பேரை கொன்றோம்: பாஜக மாஜி எம்எல்ஏவின் வீடியோ வைரல்

அல்வார்: பசுவை கொன்ற ஐந்து பேரை நாங்கள் ஏற்கனவே கொன்றுவிட்டோம் என்று பாஜக முன்னாள் எம்எல்ஏ ஒருவர் தனது ஆதரவாளர்கள் மத்தியில் பேசிய வீடியோ வைரலாகி உள்ளது. ராஜஸ்தான் மாநில முன்னாள் பாஜக எம்எல்ஏ கியான் தேவ் அஹுஜா, தனது ஆதரவாளர்கள் மத்தியில் பேசுகையில், ‘பசுவை கொல்பவர்களை  ஈவு இரக்கமின்றி கொல்லுங்கள்; அவ்வாறு பசுவை கொன்ற ஐந்து பேரை நாங்கள் ஏற்கனவே கொன்றுவிட்டோம். அவர்களை கொல்வதற்கு உங்களுக்கு முழு சுதந்திரம் தருகிறேன். உங்களை நிரபராதி என்று நிரூபித்து விடுதலை செய்வோம்’ என்று பேசியுள்ளார்.

இவர் கடந்த 2019 வரை எம்எல்ஏவாக இருந்த காலத்தில் அவரது தொகுதியில் பசு கடத்தல் என்ற பெயரில் இரண்டு கொலைகள் நடந்துள்ளன. இவரது சர்ச்சை கருத்துக்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது. ஆனால் பாஜகவின் அல்வார் பகுதி தலைவர் சஞ்சய் சிங், ‘முன்னாள் எம்எல்ஏ அஹுஜாவின் கருத்துக்கள், அவரது சொந்த கருத்துகள். இதற்கும் பாஜகவுக்கும் எந்த தொடர்பும் இல்லை’ என்றார். இருந்தும் இவரது பேச்சு அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது. பல்வேறு தரப்பினரும் கியான் தேவ் அஹுஜாவுக்கு எதிராக கண்டன கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.