3 ஆண்டுக்கு இன்டர்நெட்; 2 சிம் கார்டு வசதி பெண்கள் வாக்குகளை பெற ராஜஸ்தான் காங். தாராளம்: 1.35 கோடி பேருக்கு இலவச ஸ்மார்ட் போன்

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் 1.35 கோடி பெண்களுக்கு 3 ஆண்டுகளுக்கு இலவச இணையதள வசதியுடன், ஸ்மார்ட் போன்கள் வழங்கப்பட உள்ளன. ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் இந்த ஆண்டு பட்ஜெட்டில் ‘முக்யமந்திரி டிஜிட்டல் சேவா யோஜனா திட்டம்’என்ற திட்டத்தை அறிவித்தார். இத்திட்டத்தின் கீழ், சிரஞ்சீவி உடல்நலக் காப்பீட்டுத் திட்டத்தில் பதிவு செய்யப்பட்ட  1.35 கோடி குடும்பங்களின் பெண்களுக்கு மூன்று ஆண்டுகளுக்கு இணையதள வசதியுடன் கூடிய ஸ்மார்ட்போன்கள் வழங்கப்பட உள்ளன. இத்திட்டத்தை செயல்படுத்தும் பொறுப்பு, அரசு நிறுவனமான ராஜ்காம்புக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இத்திட்டத்துக்கான டெண்டர் கடந்த புதன்கிழமை தொடங்கியது.

இது குறித்து திட்ட பொறுப்பாளர் சத்ரபால் சிங் கூறுகையில், ‘இந்த  திட்டத்தின் கீழ் மொபைல் போன்கள், 3 ஆண்டு இலவச இன்டர்நெட் வசதி உள்ளிட்ட சேவைகளுடன் வழங்கப்பட உள்ளன. இதற்காக, ரூ.12,000 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டு உள்ளது. இந்த மொபைல் போனில் 2 சிம் கார்டுகளை போடும் வசதி உள்ளது. ஒரு சிம் ஏற்கனவே அதன் ‘பிரைமரி ஸ்லாட்டில்’செயல்படுத்தப்படும். அதை மாற்ற முடியாது. அடுத்த சிம் கார்டை மக்கள் விரும்பினால் போட்டு பயன்படுத்தலாம். அடுத்தாண்டு டிசம்பரில் ராஜஸ்தானில் சட்டசபை தேர்தல் நடைபெறுவதற்கு முன்பே இத்திட்டத்தை செயல்படுத்த திட்டமிடப்பட உள்ளது,’என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.