உச்ச நீதிமன்றம் பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ், அமலாக்கத் துறைக்கு கூடுதல் அதிகாரம் அளிக்கும் பிரிவுகள் செல்லும் என்ற தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்டுள்ள சீராய்வு மனுக்களை விசாரணைக்கு ஏற்பதாக தெரிவித்துள்ளது.
பணப் பரிமாற்ற மோசடிகளை தடுக்கும் வகையிலான பண மோசடி தடுப்புச் சட்டத்தில், அதை செயல்படுத்தும் அமலாக்கத் துறைக்கு புதிய அதிகாரங்கள் அளித்து சட்டத் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
இதன்மூலம் அமலாக்கத் துறைக்கு பண மோசடி வழக்குகளில் சொத்துக்களை பறிமுதல் செய்தல், சோதனை நடத்துதல், கைது செய்தல் போன்ற அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
இந்த சட்டப் பிரிவுகளை எதிர்த்து, 200க்கும் மேற்பட்ட மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இவற்றை விசாரித்து உச்ச நீதிமன்ற அமர்வு, ஜூலை 27ல் அளித்த தீர்ப்பில், இந்தச் சட்டப் பிரிவுகள் செல்லும் என்று தெரிவித்தது.
இந்தத் தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில்,இவற்றை விசாரணைக்கு ஏற்கும்படி, தலைமை நீதிபதி என்.வி. ரமணா அமர்வில் குறிப்பிடப்பட்டது. இதையேற்று, தலைமை நீதிபதி நீதிமன்ற விசாரணை பட்டியலில் அதை சேர்ப்பதாக தெரிவித்துள்ளார்.