குஜராத் கலவர வழக்கு: டீஸ்டா ஜாமீன் மனு தொடர்பாக உச்சநீதி மன்றம் நோட்டீஸ்…

டெல்லி:  குஜராத் கலவரம் வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள டீஸ்டா செடல்வாட் ஜாமீன் மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், அதுகுறித்து குஜராத் அரசு பதில் அளிக்க உத்தரவிட்டு உள்ளது.

கடந்த 2002-ம் ஆண்டு நடைபெற்ற  குஜராத் கலவரம் தொடர்பாக பிரதமர் மோடிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் எற்கனவே தீர்ப்பு வழங்கியது. இந்த வழக்கில் பிரதமர் மோடி மீது  போலி ஆதாரம் வைத்து வழக்கு தொடுத்ததாக குஜராத் சமூக செயற்பாட்டாளர் டீஸ்டா செடல்வாட்டை அகமதாபாத் காவல்துறையின் குற்றப்பிரிவு வழக்குப் பதிவு செய்து கைது செய்துள்ளனர். அவருடன் முன்னாள் டி.ஜி.பி ஆர்.பி.ஸ்ரீகுமார்,  முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி சஞ்சீவ் பட் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.  அவர்களை அகமதாபாத் குற்றப்பிரிவு போலீசார் ஜூன் 25-ம் தேதி கைது செய்தனர்.

இந்த வழக்கில் இடைக்கால ஜாமீன் கோரி அவர்கள் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த வழக்கில் மூன்றாவது குற்றவாளியான முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி சஞ்சீவ் பட் ஜாமீன் கோரி விண்ணப்பிக்கவில்லை. இந்த வழக்கு இன்று மூத்த நீதிபதி யுயு லலித் தலைமையிலான பெஞ்சில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரணை நடத்திய நிலையில், இடைக்கால ஜாமீன் மனு மீது பதிலளிக்க குஜராத் அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இந்த வழக்கு ஆகஸ்ட் 25-ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வரும் என்று நீதிபதி யு.யு.லலித் தலைமையிலான அமர்வு கூறியது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.