நுபுர் சர்மா பேச்சுக்கு பதிலடி தர.. இந்தியாவில் தாக்குதல் நடத்த திட்டமிட்டோம் -தீவிரவாதி வாக்குமூலம்

மாஸ்கோ: முகமது நபி குறித்து நுபுர் சர்மா சர்ச்சைக்குரிய வகையில் பேசியதன் காரணமாகவே இந்தியாவில் ஐஎஸ் தீவிரவாதி தாக்குதல் நடத்த சதித்திட்டம் தீட்டியது தெரியவந்துள்ளது.

பாஜகவின் முன்னாள் செய்தித் தொடர்பாளராக இருந்த நுபுர் சர்மா, கடந்த இரு மாதங்களுக்கு முன்பு நாடு தழுவிய அளவில் ஒரு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தினார். ஒரு செய்தித் தொலைக்காட்சியில் விவாதத்தில் பங்கேற்ற அவர், முகமது நபி குறித்து தரக்குறைவான கருத்துகளை தெரிவித்தார். இது இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. நுபுர் சர்மாவை கைது செய்யக் கோரி நாட்டின் பல்வேறு பகுதிகளில் இஸ்லாமியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒருகட்டத்தில், இந்த விவகாரம் ஐக்கிய அரபு நாடுகள் வரை பரவியது. முகமது நபி குறித்த சர்ச்சை பேச்சுக்காக இந்தியாவுக்கு கண்டனம் தெரிவித்த ஈரான், ஈராக், குவைத் உள்ளிட்ட நாடுகள், நுபுர் சர்மா மீது நடவடிக்கை எடுக்குமாறும் வலியுறுத்தின.

இதனைத் தொடர்ந்து, நுபுர் சர்மாவை கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் பாஜக சஸ்பெண்ட் செய்தது.மேலும், அவர் மீது பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குகளும் பதிவு செய்யப்பட்டன.

இதனிடையே, நுபுர் சர்மாவுக்கு ஆதரவாக ட்விட்டரில் கருத்து பதிவிட்ட ராஜஸ்தானை சேர்ந்த ஒருவரை, தீவிரவாதிகள் கடந்த ஜூன் மாதம் கொடூரமாக கொலை செய்து வீடியோ வெளியிட்டனர். மேலும், நுபுர் சர்மாவை கொலை செய்யும் நோக்கில் வந்த தீவிரவாதியையும் போலீஸார் அண்மையில் கைது செய்தனர்.

ஐஎஸ் அமைப்பு சதி

இந்நிலையில், ஐஎஸ் பயங்கரவாத இயக்கத்தைச் சேர்ந்த தீவிரவாதி ஒருவரை தலைநகர் மாஸ்கோவில் ரஷ்ய பாதுகாப்புப் படையினர் இன்று கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது, முகமது நபியை நுபுர் சர்மா இழிவுப்படுத்தியதற்கு பழிவாங்கும் நோக்கில் இந்தியாவில் தற்கொலை தாக்குதல் நடத்த அவர் திட்டமிட்டிருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதுதொடர்பாக அவர் வாக்குமூலம் அளிக்கும் வீடியோவையும் ரஷ்ய பாதுகாப்புப் படையினர் வெளியிட்டுள்ளனர். அதில் அவர், “நான் 2022-ம் ஆண்டு ரஷ்யாவுக்கு வந்தேன். இங்கிருந்து இந்தியாவுக்கு நான் செல்ல வேண்டியிருந்தது. இந்தியாவில் தாக்குதல் நடத்துவதற்கு தேவையான பொருட்களை அங்கு சிலர் எனக்கு வழங்க இருந்தனர். முகமது நபியை இழிவுப்படுத்தியதற்காக இந்த தாக்குதலை நடத்துமாறு ஐஎஸ் எனக்கு கட்டளையிட்டது” எனக் கூறியுள்ளார்.

இதுகுறித்து ரஷ்ய அதிகாரிகள் கூறும்போது, “இந்தியாவில் ஆளும் வட்டாரத்தில் உள்ள முக்கியமான தலைவரை கொலை செய்ய இந்த ஐஎஸ் தீவிரவாதி திட்டமிருந்தார். இதற்காக கடந்த ஜூன் மாதம் துருக்கியில் இருந்த அவரை தற்கொலைப் படையாக ஐஎஸ் இயக்க தலைவர் ஒருவர் தேர்ந்தெடுத்துள்ளார்” என்றனர்.

ஐஎஸ் தீவிரவாதி கைது செய்யப்பட்ட போதிலும், அவரது பெயர், எந்த நாட்டைச் சேர்ந்தவர், அவர் யாரை குறி வைத்திருந்தார் ஆகிய தகவல்களை ரஷ்ய பாதுகாப்புப் படை வெளியிட மறுத்துவிட்டது. முழுமையான விசாரணைக்கு பிறகே இதுதொடர்பான தகவல்களை தர முடியும் என ரஷ்ய அதிகாரிகள் கூறிவிட்டனர். எனினும், அந்த தீவிரவாதி மத்திய ஆசியாவில் உள்ள ஒரு நாட்டைச் சேர்ந்தவர் என்பதை மட்டும் ரஷ்யா இப்போதைக்கு தெரிவித்துள்ளது.

Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.