கடந்த மே மாதம் 9 ஆம் திகதி முதல் நாடு முழுவதும் இடம்பெற்ற வன்முறை சம்பவங்கள் தொடர்பில் மேலும் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த மே மாதம் 9 ஆம் திகதி கொள்ளுப்பிட்டியில் அம்பலாங்கொட பிரதேச சபை உறுப்பினர் ஒருவரை தாக்கி காயப்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
அவரது பணப்பையை திருடி அவரை பேற வாவியில் தள்ளிவிட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் சம்பவம் தொடர்பிலான விசாரணைகளின் போது, கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவில் குறித்த பெண் நேற்று பிற்பகல் ஆஜராகிய போதே கைது செய்யப்பட்டதாகவும், அவர் 26 வயதுடைய கொள்ளுப்பிட்டியை சேர்ந்தவர் எனவும் தெரியவந்துள்ளது.
இதேவேளை, கடந்த மே மாதம் 9ஆம் திகதி இடம்பெற்ற அமைதியின்மையின் போது நாடாளுமன்ற உறுப்பினர் பிரேம்நாத் சி.தொலவத்தவின் வீடு மற்றும் சொத்துக்கள் மீது தாக்குதல் நடத்திய நபர் ஒருவரும் நேற்று (22) கைது செய்யப்பட்டார்.. சந்தேக நபர் கடுவெல பிரதேசத்தை சேர்ந்த 33 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், நேற்று (22) கொம்பனித் தெருவில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.குறித்த நபர் 35 வயதான ஓபநாயக்கவில் வசிப்பவர் எனவும் அவர் மே 28 மற்றும் 9 ஆம் திகதிகளில் நடைபெற்ற போராட்டங்களின் போது பொலிஸ் அதிகாரிகளை தாக்கியமை, பொலிஸ் அதிகாரிகளின் கடமையைத் தடுத்தல், சட்டவிரோதமாக ஒன்றுகூடல், நீதிமன்ற உத்தரவை மீறியமை மற்றும் பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தமை ஆகிய குற்றச்சாட்டுகளில் குறித்த நபரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, கற்பிட்டி பிரதேச சபைக்கு சொந்தமான கெப் வண்டியை தாக்கி சபையின் தலைவர் மற்றும் ஊழியர்கள் இருவரை தாக்கிய குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.குறித்த சந்தேக நபர் சிலாபத்தை சேர்ந்த 50 வயதுடைய நபர் எனவும் தெரியவந்துள்ளது.
இவ்வாறு நாட்டில் அமைதியின்மையை ஏற்படுத்திய குற்றசாட்டில் நாடளாவிய ரீதியில் வெவ்வேறு இடங்களில் 4 பேரை பொலிசார் கைது செய்துள்ளனர் .