அதிமுக வழக்குகள்: சிறப்பு அமர்வில் விசாரிக்க கோரி மனுத்தாக்கல்!

2017 மற்றும் 2021 அதிமுக பொதுக்குழு, செயற்குழு தொடர்பான அனைத்து வழக்குகளையும் விசாரிக்க சிறப்பு அமர்வு அமைக்க கோரி மனுதரார்கள் சார்பில் சென்னை உயர் நீதிமன்ற நீதித்துறை பதிவாளருக்கு மனு அளிக்கப்பட்டுள்ளது.

வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன், முன்னாள் எம்பி. கே.சி.பழனிச்சாமியின் மகன் சுரேன் பழனிச்சாமி தரப்பு வழக்கறிஞர் அளித்த மனுவில், அதிமுக கட்சி 2017ம் ஆண்டு நடத்திய பொதுக்குழுவை எதிர்த்தும், 2021 டிசம்பரில் செயற்குழு கூட்டத்தில் கட்சி விதிகளில் திருத்தம் கொண்டு வந்ததை எதிர்த்தும், ஒருங்கிணைப்பாளர் – இணை ஒருங்கிணைப்பாளர் உள்ளிட்ட உள்கட்சி நிர்வாகிகள் தேர்தலை எதிர்த்தும் வழக்குகள் தொடர்ந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

ஒரே கோரிக்கையுடன் பல வழக்குகள் தாக்கல் செய்வதை தடுக்கும் வகையில், இந்த அனைத்து வழக்குகளையும் விசாரிக்க சிறப்பு அமர்வை அமைக்க வேண்டும் எனக் கோரி இவர்கள் சார்பில் கடிதம் அளித்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த ஆண்டு அதிமுக நிர்வாகிகள் தேர்வு மற்றும் உட்கட்சி தேர்தல் தொடர்பான வழக்கு நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பு இன்று விசாரணைக்கு வந்தபோது, அதிமுக தொடர்பான வழக்குகளை விசாரிக்க சிறப்பு அமர்வு அமைக்கக்கோரி பதிவாளருக்கு கடிதம் அளித்துள்ளதாக ராம்குமார் ஆதித்தன் மற்றும் சுரேன் தரப்பு வழக்குரைஞர்கள் தரப்பில் தெரிவிக்கபட்டது.

இதற்கு கடும் ஆட்சேபனை தெரிவித்த நீதிபதி, வழக்கு தொடரப்பட்டு விசாரிக்கபட்டு வரும் நிலையில் வேறு நீதிபதியை மாற்ற வேண்டுமென பதிவுத்துறை மற்றும் தலைமை நீதிபதியிடம் கடிதம் கொடுப்பதுதான் வேலையா என்றும், தலைமை நீதிபதிக்கு இந்த கடிதங்கள் மீது உத்தரவிடுவதை தவிர வேறு வேலை இல்லை என நினைக்கிறீர்களா என்றும் மனுதாரர்களுக்கு கேள்வி எழுப்பினார்.

பின்னர் அதிமுக தொடர்பான வழக்குகளை செப்டம்பர் 9ஆம் தேதி தன் முன் விசாரணைக்கு பட்டியலிட நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.