முதல்வர் ஹேமந்த் சோரன் அரசு தப்புமா..? – சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு!

ஜார்க்கண்ட் மாநிலத்தில் அரசியல் நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், முதலமைச்சர் ஹேமந்த் சோரன் தலைமையிலான அரசு மீது சட்டப்பேரவையில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ளது.

ஜார்க்கண்ட் மாநிலத்தில், முதலமைச்சர் ஹேமந்த் சோரன் தலைமையிலான ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா – காங்கிரஸ் கட்சியின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. 81 சட்டப்பேரவை உறுப்பினர்கள் கொண்ட ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவையில், ஆளும் கூட்டணி அரசுக்கு, 49 உறுப்பினர்களின் ஆதரவு இருக்கிறது. இதில், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவுக்கு, 30 உறுப்பினர்களும், காங்கிரஸ் கட்சிக்கு, 18 உறுப்பினர்களும், ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சிக்கு ஒரு உறுப்பினரும் உள்ளனர்.

இந்நிலையில், கடந்த 2021 ஆம் ஆண்டில், அதிகாரத்தை பயன்படுத்தி, முதலமைச்சர் ஹேமந்த் சோரன், தனது பெயரில் நிலக்கரி சுரங்க உரிமை பெற்றதாக, எதிர்க்கட்சியான பாஜக, இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையத்தில் புகார் கொடுத்தது. இந்தப் புகாரை விசாரித்த தேர்தல் ஆணையம், எம்எல்ஏ பதவியில் இருந்து முதலமைச்சர் ஹேமந்த் சோரனை தகுதி நீக்கம் செய்ய, ஜார்க்கண்ட் மாநில ஆளுநர் ரமேஷ் பைஸூக்கு பரிந்துரை செய்தது.

இந்த விவகாரத்தில், முதலமைச்சர் ஹேமந்த் சோரனை, எம்எல்ஏ பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்ய ஆளுநர் ரமேஷ் பைஸ் முடிவு செய்துள்ளதாகவும், இது தொடர்பான உத்தரவு கடிதத்தை, அவர் விரைவில், இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையத்திற்கு அனுப்ப உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இதற்கிடையே, ஆட்சியை தக்க வைக்கும் நோக்கில், சொந்த கட்சி எம்எல்ஏக்கள், கூட்டணி கட்சியான காங்கிரஸ் எம்எல்ஏக்களை, குந்தி என்ற இடத்தில் சொகுசு விடுதியில், முதலமைச்சர் ஹேமந்த் சோரன் தங்க வைத்தார். இதைத் தொடர்ந்து, ஆளுங்கட்சி மற்றும் கூட்டணி கட்சியான காங்கிரஸ் எம்எல்ஏக்கள், காங்கிரஸ் ஆளும் சத்தீஸ்கர் மாநிலத்திற்கு மாற்றப்பட்டனர்.

இந்நிலையில், மாநிலத்தில் நிலவும் அரசியல் நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையில், சட்டப்பேரவையில் தனது அரசின் பெரும்பான்மையை நிரூபிக்க முதலமைச்சர் ஹேமந்த் சோரன் முடிவு செய்துள்ளார். அதன்படி தானே முன்வந்து நாளை (திங்கட்கிழமை) நம்பிக்கை தீர்மானம் கொண்டு வர திட்டமிட்டு உள்ளார்.

இதற்காக நாளை சிறப்பு சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்கும்படி அனைத்து எம்.எல்.ஏ.க்களுக்கும் கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது. இதற்கிடையே, நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ள நிலையில், பாஜக எம்எல்ஏக்கள் கூட்டம் இன்று நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.