'காடெல்லாம் உன் ராஜாங்கம்’.. வித்தியாசமான கலரில் ‛நானே வருவேன்' முதல் பாடல்!

தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘நானே வருவேன்’ திரைப்படத்தின் முதல் பாடலான ‘வீரா சூரா’ பாடல் வெளியாகியுள்ளது.

நானே வருவேன் படம் குறித்த அறிவிப்பு வெளியான நாள் முதல் தற்போது வரை படம் எதைப் பற்றியதான கதை என்பதை யூகிக்க முடியாமல் இருந்து வருகிறது. ஆனால், மரங்கள் அடர்ந்த காடு பகுதியில், பனிப்பிரதேசத்தில் நடப்பது போன்று இருக்கும் என்பதை இதுவரை வெளியான போஸ்டர்கள் மூலம் யூகிக்க முடிகிறது. 

இந்நிலையில்தான், இன்று வெளியாகியுள்ள வீரா சூரா பாடலும் அதையே உறுதிப் படுத்தும் வகையில் உள்ளது. 3.31 நிமிடங்கள் கொண்ட பாடலின் பெரும் பகுதி பிஜிஎம் ஆக உள்ளது. பாடலின் வரிகளே 1.03 ஆவது நிமிடத்தில் தான் வருகிறது. அதுவரை இசையே பின்னணியில் மெல்ல மெல்ல டெவலப் ஆகிறது. 44வது நொடியில் ஒரு நல்ல பீட் ஒலிக்கிறது. யுவன் சங்கர் ராஜாவின் குரலில் இடையே வரும் ‘காடெல்லாம் உன் ராஜாங்கம்’ என்ற வரிகள் வித்தியாசமான உணர்வுகளை கொடுக்கிறது.

செல்வராகவன் இந்த பாடலை எழுதியுள்ளார். தீம் ஆஃப் டார்க் சைட் என இந்தப் பாடலுக்கு பெயரிட்டுள்ளார்கள். அதாவது படத்தில் தனுஷ் இரண்டு கதாபாத்திரத்தில் நடிக்கிறது. அதில் ஒரு காதாபாத்திரம் நெகட்டிவ். இதனைத்தான் தனுஷ் இந்தப் பாடலுக்கான அறிவிப்பின் போது, “ஒரே ஒரு ஊருக்குள்ளே, இரண்டு ராஜா இருந்தாராம்.. ஒரு ராஜா நல்லவராம், இன்னொரு ராஜா கெட்டவராம்” என்று குறிப்பிட்டிருந்தார். 

பாடல் மற்றும் போஸ்டர்களின் நிறைய இடங்களில் வில் அம்பு இடம்பெற்றுள்ளது. துப்பாக்கியும், கோடாரியும் வருகிறது. அநேகமாக கடத்தல் சம்பந்தப்பட்ட படமாக இருக்க வாய்ப்பிருக்கிறது. அது என்ன வகையான கடத்தல் என்பதை யூகிக்க முடியவில்லை. மரமா, ஏதேனும் மிருகமா அல்லது வேறு ஏதேனும் ஒரு விலையுயர்ந்த பொருளா என்பது யூகிக்க முடியவில்லை. இருப்பினும் இந்தப் படம் நிச்சயமாக விஷூவல் ட்ரீட் ஆக இருக்க வாய்ப்பிருக்கிறது. லோக்கேஷன் அனைத்தும் அவ்வளவும் அழகாக இருக்கிறது.

செல்வராகவன் இயக்கியுள்ள ‘நானே வருவேன்’ படத்தை கலைப்புலி எஸ். தாணு தயாரித்துள்ளார் . தனுஷுடன் எல்லி அவுரம் என்ற ஸ்வீடன் நாட்டு நடிகையும், இந்துஜா ரவிச்சந்திரன், யோகி பாபு, பிரபு என பலர் நடித்துள்ள இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசைமைத்துள்ளார்.


இந்த திரைப்படம் இம்மாதம் 29ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. நீண்ட இடைவேளைக்கு பிறகு இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பதால் ‘நானே வருவேன்’ படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது. பொன்னியின் செல்வம் ரிலீஸ் ஆகும் அதே நாளில் நானே வருவன் படமும் வெளியாவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: என்ன வந்தாலும் எனக்குரிய அரியணையை கைவிடமாட்டேன்‘-‘பொன்னியின் செல்வன்’ ட்ரெய்லர் வெளியீடு

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.