கேரள பத்திரிகையாளர் சித்திக் கப்பனுக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் – வழக்கின் பின்புலம்

புதுடெல்லி: ஹத்ராஸ் கூட்டுப் பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கு தொடர்பாக செய்தி சேகரிக்கச் சென்றபோது கைது செய்யப்பட்ட கேரள பத்திரிகையாளர் சித்திக் கப்பன் 2 ஆண்டுகளுக்குப் பின்னர் ஜாமீனில் விடுதலையாகியுள்ளார்.

கடந்த 2020-ஆம் ஆண்டு இவர் சட்டவிரோத செயல்பாடுகள் தடுப்புச் சட்டம் 1967 மற்றும் உபா சட்டத்தின் (Unlawful Activities (Prevention) Act கீழ் கைது செய்யப்பட்டார். நாட்டையே உறையவைத்த ஹத்ராஸில் பட்டியலினப் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது பற்றி செய்தி சேகரிக்க ஹத்ராஸ் சென்றபோதுதான் சித்திக் கப்பன் கைது செய்யப்பட்டார்.

சித்திக் கப்பனுக்கு ஜாமீன் கோரி நடந்துவந்த வழக்கில் இரண்டாண்டுகளுக்குப் பின்னர் அவருக்கு உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் கிடைத்துள்ளது. அந்த ஜாமீன் உத்தரவில், ‘பாஸ்போர்ட்டை ஜாமீனில் விடுதலையாவதற்கு முன்னரே ஒப்படைத்துவிட வேண்டும். அடுத்த 6 வாரங்களுக்கு அவர் டெல்லியிலே தங்கி இருக்க வேண்டும். டெல்லி நிசாமுதீன் காவல் நிலையத்தில் வாரம் ஒருமுறை கையெழுத்திட வேண்டும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதன் பின்னர் சித்திக் கப்பன், அவரது சொந்த ஊரான கேரளாவின் மலப்புரத்திற்குச் செல்லலாம். அங்கு அவர் உள்ளூர் காவல் நிலையத்தில் தினமும் கையெழுத்திட வேண்டும். ஜாமீன் கால சுதந்திரத்தைப் பயன்படுத்தி வழக்கு சம்பந்தமாக யாரையும் சந்திக்கக் கூடாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னதாக, சித்திக் கப்பனின் ஜாமீன் மனுவை எதிர்த்த உ.பி. அரசு, ‘அவருக்கு பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா அமைப்புடன் தொடர்புள்ளது. அவர் மத மோதல்களை உருவாக்கவும், தீவிரவாதத்தைப் பரப்பவும் பிஎஃப்ஐ உடன் இணைந்து சதி செய்துவந்தார்’ என்று தெரிவித்தது. ஏற்கெனவே கப்பனின் ஜாமீன் மனுவை அலகாபாத் உயர் நீதிமன்றம் நிராகரித்த நிலையில், தற்போது அவருக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.

இது குறித்து முஸ்லிம் லீக் கட்சியை சேர்ந்த முகமது பஷீர் கூறுகையில், “இது நல்ல விஷயம். ஒருவழியாக சித்திக் கப்பனுக்கு ஜாமீன் கிடைத்துள்ளது. இதுபோல் நிறைய விசாரணைக் கைதிகள் சிறையில் வாடி வருகின்றனர். சித்திக் ஜாமீன், நீதித்துறை மீது நம்பிக்கை ஏற்படுத்தும்” என்றார்.

ஹத்ராஸில் நடந்தது என்ன? – 2020 செப்டம்பர் 14 ஆம் தேதி ஹத்ராஸ் பகுதியைச் சேர்ந்த 20 வயது நிரம்பிய தலித் பெண் ஒருவர் தனது கால்நடைகளுக்கு தீவனம் சேகரிக்க வயலுக்குச் சென்றார். அங்கு அவரை உயர் சாதியாக அறியப்படும் தாக்கூர் சமூகத்தைச் சேர்ந்த சந்தீப், ராமு, லவகுஷ், ரவி என்ற 4 பேர் பாலியல் வன்கொடுமை செய்தனர். அது வெறும் பாலியல் வன்கொடுமை வழக்காக மட்டும் இருக்கவில்லை. அந்தப் பெண்ணின் நாக்கை துண்டித்து, அவரை கழுத்தை நெறித்துக் கொலை செய்யவும் முயற்சி நடந்துள்ளது. மிக மோசமாக பாதிக்கப்பட்ட அந்தப் பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த வழக்கில் முதல் தகவல் அறிக்கையே 6 நாட்களுக்குப் பின்னர் செப்டம்பர் 20-ஆம் தேதி தான் பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு விசாரணை சிபிஐ கைகளுக்கு மாறியது. அலிகர் மருத்துவமனையிலிருந்து அந்தப் பெண், டெல்லி சாஃப்டர்ஜங் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். ஆனால், செப்டம்பர் 29ஆம் தேதி அந்தப் பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பின்னர் நடந்த விசாரணைகளில் அப்பெண்ணின் நாக்கை யாரும் துண்டிக்கவில்லை கழுத்தை நெறிக்கும்போது அவர் நாக்கைக் கடித்ததால் நாக்கு துண்டானது என்றெல்லாம் கூட வாதாடப்பட்டது. இவை எல்லாவற்றிற்கும் மேலாக இறந்துபோன அப்பெண்ணின் சடலம் அவரது சொந்த ஊரில் அவசர அவசரமாக போலீஸாராலேயே தகனம் செய்யப்பட்டது. தங்கள் மகளின் சடலத்தை தகனம் செய்ய தாங்கள் அனுமதி கொடுக்கும் முன்னரே செய்துவிட்டதாக அவர்கள் கூறினர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.