தஞ்சாவூர்: அதிமுகவில் ஓபிஎஸ், இபிஎஸ் அணிகள் என மீண்டும் பிரிவினை ஏற்பட்டுள்ள நிலையில் ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கமும், சசிகலாவும் சந்தித்துக் கொண்ட நிகழ்வு தஞ்சை அருகே நடந்துள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே காவாரப்பட்டு கிராமத்தில் நடைபெற்ற ஒரு திருமண விழாவில் பங்கேற்பதற்காக ஓபிஎஸ் ஆதரவாளரும் முன்னாள் அமைச்சருமான வைத்திலிங்கம் இன்று காரில் சென்று கொண்டிருந்தார் .அப்போது மன்னார்குடியில் இருந்து ஒரத்தநாடு நோக்கி ஜெயலலிதாவின் தோழி சசிகலாவும் மற்றொரு காரில் வந்து கொண்டிருந்தார். திடீரென இரண்டு கார்களும் காவாரப்பட்டு அருகே சாலை ஓரத்தில் நிறுத்தப்பட்டது. அப்போது வைத்திலிங்கம் காரில் இருந்து இறங்கி சென்றார் அதே நேரத்தில் சசிகலாவும் காரில் இருந்து இறங்கி வந்தார் இருவரும் பரஸ்பரம் நலம் விசாரித்துக் கொண்டனர்.
அப்போது அருகே இருந்த வைத்திலிங்கத்தின் ஆதரவாளர் ஒருவர் அண்ணனுக்கு இன்று பிறந்தநாள் என கூறும் கூறியதும் உடனடியாக காரில் இருந்து எடுத்துவரப்பட்ட சாக்லேட்டை வைத்திலிங்கத்திற்கு சசிகலா வழங்கி வாழ்த்து தெரிவித்தார் இருவரது சந்திப்பும் தற்போது அரசியலில் பரபரப்பாகிக் கொண்டிருக்கிறது.
அதிமுக ஓபிஎஸ் அணி, ஈபிஎஸ் அணி என்று இரண்டாது பிரிந்துள்ளது. மேலும் கடந்த ஆகஸ்ட் மாதம் ஈபிஎஸ் தலைமையில் நடந்த பொதுக் குழுவும் அதில் உருவாக்கப்பட்ட தீராமானங்களும் செல்லாது என்றும் ஒபிஎஸ் அணி தரப்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.