தடுப்பூசி போட்டும் இரண்டு மாணவிகள் மரணம்; கேள்வி குறியாகும் ரேபிஸ் மருந்துகள்

கேரளா மாநிலம் பத்தனம்திட்டாவை சேர்ந்தர் 12 வயதான அபிராமி. இவரை கடந்த ஆகஸ்ட் மாதம் 13 ஆம் தேதி வீட்டருகே இருந்த தெரு நாய் ஒன்று அபிராமியின் கண் பகுதி உட்பட 6 இடங்களில் பலமாக கடித்துள்ளது. உடனே சிறுமியை மீட்டு கோட்டயம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிறுமிக்கு ரேபிஸ் தடுப்பூசியும் போடப்பட்டுள்ளது. தொடர்ந்து தீவிர சிகிச்சையில் இருந்து வந்த அபிராமி கடந்த திங்கட்கிழமை அன்று பரிதாபமாக உயிரிழந்தார். அபிராமியின் மரணம் கேரளா சுகாதாரத்துறை மத்தியில் பூகம்பமாக வெடித்தது.

அதற்கு காரணம், சுமார் 20 நாட்களுக்கு மேலாக சிகிச்சையில் இருந்து வந்த சிறுமி ரேபிஸ் தடுப்பூசி போட்ட பின்னரும் எப்படி உயிரிழந்தார் என்றும் கேரளாவில் பயன்பாட்டில் உள்ள ரேபிஸ் மருந்துகளை மறு பரிசோதனை செய்ய வேண்டும் எனவும் ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதினர். அதன்படி, புனேவில் உள்ள ஆராய்ச்சி மையத்தில் சோதனையும் செய்யப்பட்டது. அவர்கள் கொடுத்த அறிக்கையில், சிறுமிக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அவரது உடலில் ரேபிஸ் வைரஸை எதிர்க்கும் ஆன்டிபாடிகள் இருந்துள்ளது. ஆனால், சிறுமியின் கண்ணருகே நாய் கடித்திருந்ததால் ரேபிஸ் மருந்து வேலை செய்வதற்கு முன்பே ரேபிஸ் வைரஸ் சிறுமியின் மூளையை பாதித்திருக்கலாம் என சந்தேகம் எழுவதாக அவர்கள் தெரிவித்திருந்தனர்.

இதனிடையே, அபிராமியின் உறவினர்கள் மருத்துவர்களின் அலட்சியம் தான் அபிராமியின் மரணத்துக்கு காரணம் எனக்கூறி போராட்டம் நடத்தினர். அதன் பின்னர் மந்தபுழாவில் அபிராமியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. ஆனால், அப்போது சுகாதாரத்துறை அமைச்சர் வராததால் உறவினர்களும், ஊர்மக்களும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதேபோல அண்மையில் கேரளா மாநிலம் பாலக்காடு பகுதியைச் சேர்ந்த ஸ்ரீலட்சுமி என்ற பெண் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தபோது வளர்ப்பு நாய் கடித்துள்ளது. இதனால் ஸ்ரீலட்சுமி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சென்றபோது ரேபிஸ் தடுப்பு ஊசி போடப்பட்டுள்ளது. அதன்பின்னர் மாணவி ரேபிஸ் அறிகுறிகள் ஏதுமில்லாமல் நலமாகவே இருந்துள்ளார். அடுத்த வாரம் ஸ்ரீலட்சுமிக்கு காய்ச்சல் அடித்துள்ளது. இதனால் பாலக்காட்டுக்கு சென்ற மாணவியை மங்காராவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்துள்ளனர்.

அங்கு பரிசோதித்ததில் ஸ்ரீலட்சுமிக்கு ரேபிஸ் இருப்பது தெரிய வந்தது. ரேபிஸ் சிகிச்சை கொடுத்தும் உடல்நலம் மோசமாகிவிட்டதால் மாணவியை திருச்சூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த மாணவி ஜூன் 30 ஆம் தேதி உயிரிழந்தார். ரேபிஸ் தடுப்பூசி போட்டும்கூட கேரளாவில் இரண்டு மாணவிகள் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.