தவறு செய்யும் அதிகாரிகள்: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர் நீதிமன்ற கிளை உத்தரவு!

ஏழைகளுக்காக அரசால் செயல்படுத்தப்படும் மருத்துவ திட்டங்களில், தவறு செய்யும் அதிகாரிகள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கக் கோரிய வழக்கில் மத்திய, மாநில சுகாதாரத்துறை செயலர்கள் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

திருச்சி கே.கே. நகரைச் சேர்ந்த கார்திக் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அதில், “ஏழை மக்களின் நலன் கருதி மருத்துவ காப்பீடு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. பாதிக்கப்பட்ட ஏழை நோயாளிகளை, தனியார் மருத்துவமனைகளில் அரசின் மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் சேர்க்கும் போது, முறையான கவனிப்பு வழங்கப்படுவதில்லை.

மிகவும் கவனமுடன் சிகிச்சை அளிப்பதும் இல்லை. இதனால் பல கோடி ரூபாய் மதிப்பில் செலவு செய்யப்படும் இந்த திட்டங்களின் நோக்கம் நிறைவேறாமல் உள்ளது. எனவே, ஏழை மக்களின் நலனுக்காக செயல்படுத்தப்படும் மருத்துவ காப்பீடு திட்டங்கள் உள்ளிட்ட திட்டங்களை முறையாக அமல்படுத்த வேண்டும்.” என கோரியிருந்தார்.

மேலும், “திடீர் தணிக்கைகள், ஆய்வுகள் உள்ளிட்ட நடவடிக்கைகளைத் தொடங்க வேண்டும். இவற்றை முறையாக செய்யாத மருத்துவமனையின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும். அரசின் மருத்துவ காப்பீடு திட்டதின் கீழ் அனுமதிக்கப்படும் நோயாளிகளுக்கு உரிய கவனம் செலுத்தாத மருத்துவமனைகள், அதனை கண்காணிக்க அரசால் நியமிக்கப்பட்ட பணியாளர், மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும்” எனவும் அவர் தனது மனுவில் கோரியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் மகாதேவன் மற்றும் சத்யநாராயண பிரசாத் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கு குறித்து மத்திய, மாநில சுகாதாரத்துறை செயலர்கள் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நீதிபதிகள் ஒரு வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.