திருவாடானை அருகே 100 ஆண்டு பழமையான சிவசூரிய பெருமாள் கோயில் கும்பாபிஷேம்

திருவாடானை: திருவாடானை அருகே 100 ஆண்டு பழமையான சிவசூரிய பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். திருவாடானை அருகே கீழ்க்குடி கிராமத்தில் 100 ஆண்டு பழமையான மிகவும் பிரசித்தி பெற்ற அரிதிலும் அரிதாக ஒரே ஆலயத்தில் சிவனும், பெருமாளும் மூலவர்களாக காட்சியளிக்கும் சிவசூரிய பெருமாள் கோயில் உள்ளது. இந்த கோயில் 12 ஆண்டுகளுக்கு பிறகு கீழ்குடி கிராம பொதுமக்களால் புனரமைப்பு செய்து கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

இதையொட்டி நேற்று முன்தினம் இரவு முதல் இரண்டு கால யாகசாலை பூஜை நடைபெற்று யாக சாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனிதநீரை பட்டாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கோபுர கலசத்தில் புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் அதிவிமர்சையாக நடைபெற்றது. அதன்பிறகு மூலவர்களான சிவன் மற்றும் பெருமாள் சுவாமிக்கும் விநாயகர், முருகன், ஆஞ்சநேயர் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கும், காவல் தெய்வமான கருப்ப சுவாமிக்கும் அபிஷேக ஆராதனை, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.

சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த பெண்கள் உட்பட ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். கும்பாபிஷேகத்தையொட்டி தொண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.