வாலாஜாபாத் பேரூராட்சி 10-வது வார்டில் மூடி கிடக்கும் நியாய விலைக்கடை; பேரூராட்சி தலைவர் நேரில் ஆய்வு

வாலாஜாபாத்: வாலாஜாபாத் பேரூராட்சி 10வது வார்டில் உள்ள பயன்பாடின்றி மூடி கிடக்கும் நியாய விலைக்கடையை பேரூராட்சி மன்ற தலைவர் இல்லாமல்லி நேற்று ஆய்வு செய்தார்.
வாலாஜாபாத் பேரூராட்சியில், 15 வார்டுகள் உள்ளன. இந்த பேரூராட்சியின், 1வது வார்டு பகுதியில் 1300க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் அரசின் நியாயவிலை கடையில் வழங்கப்படும் அரிசி, பருப்பு, சக்கரை, பாமாயில் உள்ளிட்ட பொருட்களை வாங்குவதற்கு ஒரு கிலோ மீட்டர் தூரம் உள்ள நேரு நகர் பகுதிக்கு சென்று வந்தனர். இதனால், இப்பகுதி முதியவர்களும், பெண்களும் கடும் சிரமப்பட்டு வந்தனர். இந்நிலையில், 10வது வார்டு பகுதியில் உள்ள முன்ஷிப் நாராயணசாமி தெருவில் புதிய நியாய விலை கடை துவங்கப்பட்ட நாளிலிருந்து சில மாதங்களே செயல்பட்ட நிலையில் தற்போது இந்த நியாய விலை கடை கட்டிடம் செயல்பாடு இன்றி கிடப்பில் போடப்பட்டுள்ளது.

இது குறித்த செய்தி நேற்று தினகரன் நாளிதழில் படத்துடன் வெளியாயின. இதனையடுத்து பேரூராட்சி தலைவர் இல்லாமல்லி செயல்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ள முன்ஷிப் நாராயணசாமி தெருவில் உள்ள நியாய விலை கடைக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார். மேலும், அப்பகுதி மக்களிடையே குறைகளை கேட்டறிந்தார். இதனையடுத்து, மீண்டும் இந்த நியாயவிலை கடை விரைந்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார். இந்த திடீர் ஆய்வு அப்பகுதி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது மட்டுமின்றி தினகரன் நாளிதழுக்கும் மக்கள் நன்றி தெரிவித்து கொண்டனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.