ஹாட்-ரிக் ஹிட் அடித்த ஸ்டாலின்… கடைசியில இப்படி ஆகிப்போச்சே!

திமுக 10 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியை பிடித்துள்ளது. கலைஞர் கருணாநிதி இல்லாமல் நாடாளுமன்றத் தேர்தல், சட்டப்பேரவை தேர்தல், உள்ளாட்சித் தேர்தல் என ஹாட்ரிக் ஹிட் அடித்துள்ளார்

. ஆனால், சொந்தக்கட்சியான திமுக உட்கட்சித் தேர்தலை நடத்துவதில் அவருக்கு பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அவரே அப்செட் ஆகும் அளவுக்கு உடன்பிறப்புகள் அவருக்கு குடைச்சலை கொடுத்து வருவதாக தெரிகிறது.

திமுகவின் 15ஆவது உட்கட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டு நடைபெற்று வருகிறது. கீழ்மட்டம் முதல் மேல்மட்டம் வரை பதவிகளுக்கான தேர்தல் நடைபெற்று வருகிறது. திமுகவில் தலைவர் தேர்தலில் பெரிதாக எதிர்பார்ப்புகள் இருக்காது. ஏனெனில் அது ஏற்கனவே திட்டமிடப்பட்ட ஒன்றாக இருக்கும். யார் தலைவர் என்பது அனைவருக்குமே தெரியும். ஆனால், உட்கட்சித் தேர்தல் குறிப்பாக மாவட்ட செயலாளர் தேர்வு என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

திமுக, அதிமுகவை பொறுத்தவரை மாவட்ட செயலாளர்கள் பதவி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. அமைச்சருக்கு ஈடாக அப்பதவிகள் பார்க்கப்படும். மாவட்ட செயலாளர்கள் பதவியில் இருப்பவர்கள் பல வழிகளில் கல்லா கட்ட முடியும் என்பதால், இந்த பதவியை பிடிக்க கடும் போட்டி நிலவுவது வழக்கம். திமுகவை பொறுத்தவரை தற்போது ஆளுங்கட்சியாக இருப்பதால், மாவட்ட செயலாளர்கள் பதவிகளை பிடிக்க பலரும் தங்களுக்கு தெரிந்த வகைகளில் மிகப்பெரிய லாபி செய்து வருகிறார்கள். தேர்தல் நடைபெற்றாலும், கட்சித் தலைவர் கைகாட்டும் நபரே மாவட்ட செயலாளராக அமர்வார்கள்; தலைவர் கைகாட்டும் நபரே மாவட்ட செயலாளராக தேர்வு செய்யப்படுவர் என்பது இத்தகைய லாபிகளுக்கு காரணம். திமுக முப்பெரும் விழாவுக்கு பிறகு முடிவு தெரியவர வாய்ப்புள்ளதாக கூறுகிறார்கள்.

அதேசமயம், மாவட்ட செயலாளர் தேர்வில் தனி டீமை வைத்து அலசி ஆராய்ந்த திமுக தலைவர் ஸ்டாலின், அதனடிப்படையில் மாவட்ட செயலாளர்கள் லிஸ்ட்டை தயார் செய்து விட்டதாக கூறுகிறார்கள். கடந்த 10 ஆண்டுகளாக திமுக ஆட்சிப் பொறுப்பில் இல்லாத போதும், கட்சிக்காக உண்மையாக உழைத்தவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க அவர் முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது. அதேசமயம், அதிகம் புகாருக்குள்ளானவர்களுக்கு மாவட்ட செயலாளர்கள் பதவி மீண்டும் கிடைப்பது சந்தேகம்தான் என்கிறார்கள் இதுதொடர்பான விவரம் அறிந்தவர்கள்.

இருப்பினும், பல்வேறு இடங்களில் இருந்து வரும் நெருக்கடி காரணமாக மாவட்ட செயலாளர்கள் தேர்வில் இன்னமும் இழுபறிதான் நீடித்து வருகிறதாம். தான் தயார் செய்து வைத்த லிஸ்ட்டை இறுதி செய்ய முடியாமல் ஸ்டாலின் பெரும் குழப்பத்தில் இருப்பதாக கூறுகிறார்கள். தனக்கு மாவட்ட செயலாளர்கள் பதவி கேட்பதை விட மற்றவர்களுக்கு கொடுக்கக் கூடாது என்ற புகார்கள்தான் அறிவாலயத்துக்கு அதிகமாக வருகிறதாம்.

கடந்த 10ஆண்டுகளாக ஆட்சியில் இல்லாத போது கட்சிக்காக செலவு செய்துள்ளோம். திமுக ஆட்சியை பிடிக்கவே நாங்கள்தான் காரணம். எனவே, சிறிய புகார்களையெல்லாம் பெரிதுபடுத்தக் கூடாது. பழிவாங்கும் பொருட்டு புகார்கள் அளிக்கப்படுகின்றன. அதையெல்லாம் கண்டு கொள்ளக் கூடாது என சிலர் கோரிக்கை வைத்து வருவதாக தெரிகிறது. அதேபோல், இளைஞரணியின் செயல்பாடுகள் திருப்திகரமாக உள்ளது. எனவே, அவர்களுக்கு வாய்ப்பளித்து கட்சியை வளர்க்கும் பணிகளில் ஈடுபட வேண்டும் என இளைஞரணி தரப்பில் கோரிக்கைகள் வைக்கப்படுவதாக கூறப்படுகிறது.

மேலும், மாவட்ட செயலாளர்களாக இருக்கும் அமைச்சர்கள் தங்களுக்கு மீண்டும் மாவட்ட செயலாளர் பதவியை கோருவதுடன், தங்களது ஆதரவாளர்களுக்கும் பதவி தர வேண்டும் என அழுத்தம் கொடுப்பதாக தெரிகிறது. அதுதவிர, மாற்று கட்சியில் இருந்து வந்த வெயிட்டான புது முகங்களும் அந்தந்த மாவட்ட பொறுப்பு அமைச்சர்கள் மூலமாக மாவட்ட செயலாளர் பதவிக்கு காய் நகர்த்து வருகிறார்கள். இப்படி பல இடங்களில் இருந்து வரும் அழுத்தம் காரணமாக என்ன முடிவெடுப்பது என்பது தெரியாமல் ஸ்டாலின் குழப்பத்தில் இருப்பதாக தெரிகிறது.

திமுகவை பொறுத்தவரை மாவட்ட செயலாளர்கள் என்பவர்கள் குறுநில மன்னர்களாக ஆதிக்கம் செலுத்துபவர்கள் என்ற குற்றச்சாட்டு உள்ளது. அவர்களது ஆதிக்கத்தை குறைக்கவும், மற்றவர்களுக்கு வாய்ப்பளித்து அவர்களை வளர்த்து விடும் எண்ணத்திலும் அமைப்பு ரீதியான மாவட்டங்கள் திமுகவில் அதிகமாக்கப்பட்டன. தற்போது எதிர்கால வளர்ச்சியை கருத்தில் கொண்டு நிர்வாக ரீதியான மாவட்டங்களை மறுசீரமைப்பது குறித்தும் ஒரு பேச்சு ஓடுவதாக தகவல்கள் கசிகின்றன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.