காலி மதுபான பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம் தொடர்பான வழக்கு: அக்.11-ல் உத்தரவு

சென்னை: காலி மதுபான பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தை தமிழகம் முழுவதும் அமல்படுத்துவது தொடர்பான வழக்கில் அக்டோபர் 11-ம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்படும் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மலைப்பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளில் காலி மதுபான பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில், மாநிலம் முழுவதும் இத்திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக விளக்கமளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

ஆனால், மாநிலம் முழுவதும் அமல்படுத்துவதில் சிக்கல்கள் உள்ளதாக தமிழக அரசு விளக்கமளித்திருந்தது. இருப்பினும், காலி மதுபான பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தை மாநிலம் முழுவதும் அமல்படுத்துவது தொடர்பாக ஆலோசனைகள் வழங்கும்படி வழக்கறிஞர்களை உயர் நீதிமன்றம் கேட்டுக் கொண்டது.

இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் பரத சக்கரவர்த்தி அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசுத் தரப்பில், காலி மது பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தை மாநிலம் முழுவதும் எவ்வாறு அமல்படுத்தலாம் என்பது குறித்த வழக்கறிஞர்களின் ஆலோசனைகளை பெறப்பட்டுள்ளது. அவற்றை பரிசீலித்து அறிக்கை அளிப்பதாக தெரிவிக்கப்பட்டது.

இதனை ஏற்று, தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், இந்த வழக்கில் அக்டோபர் 11-ம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்படும் எனத் தெரிவித்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.