தனது அந்தரங்க வீடியோவை வெளியிட்ட சென்னை டாக்டரை கொன்ற காதலி

* அரை மணி நேரம் சரமாரி அடி
* தப்பிய மேலும் ஒருவருக்கு வலை

பெங்களூரு: பெங்களூருவில் அந்தரங்க வீடியோவை வெளியிட்டதாகக் கூறி, காதலனை  தனது 3 நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்த காதலியை போலீசார் கைது செய்தனர். சென்னையைச் சேர்ந்த டாக்டர் விகாஷ், உக்ரைனில் மருத்துவப் படிப்பை  முடித்துவிட்டு சென்னையில் மருத்துவராகப் பணியாற்றி வந்தார். மேலும், இவர்  தனது உயர் படிப்பிற்காக கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு பெங்களூரு வந்தார். இவருக்கு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சமூக வலைதளங்கள் மூலம்  அறிமுகமானவர் பிரதீபா, இவரும் தமிழ்நாட்டை சேர்ந்தவர். இவர், எச்எஸ்ஆர் லே  அவுட்டில் உள்ள  நிறுவனத்தில் கட்டிட கலைஞராகப் பணியாற்றி வருகிறார்.

நண்பர்களாக  இருந்த இருவரும் பின்னர் காதலிக்க தொடங்கினர். இவர்களின் காதலுக்கு பெற்றோர்களும் சம்மதம் தெரிவித்த நிலையில், இருவருக்கும் வரும் நவம்பர்  மாதம் திருமணம் நடத்தி வைக்க ஏற்பாடு செய்தனர். இந்நிலையில், பிரதீபா மற்றும் அவரது தாயாரின் அந்தரங்க வீடியோக்களை விகாஷ் போலியான இன்ஸ்டாகிராம்  பக்கத்தில் பதிவிட்டு அதை தனது நெருங்கிய நண்பருக்கு அனுப்பி வைத்துள்ளார். விகாஷின் மடிக்கணினியை பயன்படுத்திய போது அவரது செயலை கண்டு அதிர்ச்சி அடைந்த பிரதீபா அவரிடம் சண்டை போட்டார்.

தொடர்ந்து, தனது காதலனால் ஏமாற்றப்பட்டது குறித்து பிரதீபா தனது சக நண்பர்களான சுஷில், கவுதம், சூர்யா ஆகியோரிடம்  தெரிவித்து விகாஷுக்கு பாடம் புகட்ட உதவி கேட்டதாக தெரிகிறது. இதனை கேட்டு ஆத்திரமடைந்த நண்பர்கள், கடந்த 10ம் தேதி விகாஷிடம் இந்த விவகாரம் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதாகக் கூறி மைக்கோ லேஅவுட்  பகுதிக்கு அழைத்தனர். வீட்டில் இது குறித்து விவாதித்த போது இரு தரப்பிடையே  வாக்குவாதம் முற்றி பிரதீபா மற்றும் அவரது நண்பர்கள் விகாஸ் முகத்தின் மீது அரை மணி நேரம் விடாமல் கடுமையாக தாக்கி உள்ளனர்.

இதில்,  பலத்த காயமடைந்த விகாஷ் மயங்கிய நிலையில் பதறிப்போன பிரதீபா, அவரை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார். மர்ம நபர்கள் யாரோ அவரைத் தாக்கி விட்டு சென்று இருக்கலாம் என பிரதீபா போலீஸ் அதிகாரிகளிடமும் விகாஷ் குடும்ப உறுப்பினர்களிடம் தெரிவித்த நிலையில் பிரதீபா மீது இருந்த நம்பிக்கையில் அவர் மீது சந்தேகப்படாமல் போலீசார் இருந்து விட்டனர். இந்நிலையில் சிகிச்சைப் பலனின்றி  கடந்த 14ம் தேதி விகாஸ் உயிரிழந்தார்.

இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், விகாஷை தாக்கிய சுஷில், கவுதம் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்திய போது முழு தகவல் கிடைத்தது. இதற்கு உடந்தையாக இருந்த பிரதீபாவையும் கைது செய்தனர். மேலும், தலைமறைவாக உள்ள சூர்யாவை தொடர்ந்து தனிப்படை அமைத்து தமிழ்நாடு, கேரளா மற்றும் ஆந்திரா ஆகிய மாநிலங்களில் போலீசார் தேடி வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.