தலைமை ஆசிரியரை கழுத்தை பிடித்து தாக்கிய திமுக பிரமுகர்..! பள்ளிக்குள் புகுந்து அட்டகாசம்..!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே அரசு தொடக்கப் பள்ளிக்குள் குடி போதையில் புகுந்த திமுக கவுன்சிலரின் கணவர் , தலைமை ஆசிரியரை கழுத்தைப்பிடித்து தாக்கிய சம்பவத்தின் வீடியோ வெளியாகி உள்ளது

திருப்பூர் மாவட்டம் அவிநாசி கைகாட்டிபுதூர் பகுதியில் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இதில் 60க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர்.

இந்தப் பள்ளியின் பின்புறம் உள்ள பாஸ்கர் என்பவரது வீட்டிலிருந்து தினமும் பள்ளி வளாகத்திற்குள் குப்பைகள் கொட்டப்பட்டு சுகாதார கேடு ஏற்பட்டதால், குப்பைகளை இங்கு கொட்ட வேண்டாம் என பல முறை தலைமை ஆசிரியர் தெரிவித்து வந்துள்ளார்.

இந்நிலையில், பள்ளியில் உள்ள செடிகளுக்கு மாணவர்கள் தண்ணீர் ஊற்ற சென்ற போது, பக்கத்து வீட்டை சேர்ந்த பாஸ்கர் பள்ளி மாணவர்கள் மீது கழிவுநீரை ஊற்றியுள்ளார்.

இது குறித்து மாணவர்கள் எதிர்த்து கேட்டபோது, ஆத்திரமடைந்த பக்கத்து வீட்டை சேர்ந்த பாஸ்கர் பள்ளி மாணவர்கள் 6 பேரையும் அடித்து விரட்டி உள்ளார். இச்சம்பவம் குறித்து பள்ளி தலைமை ஆசிரியர் அவிநாசி காவல் நிலையத்தில் புகார் அளித்ததை அடுத்து போலீசார் பாஸ்கரை அழைத்து கண்டித்துள்ளனர்.

மாணவர்கள் தாக்கப்பட்டதை அறிந்து பெற்றோர் பள்ளியில் விசாரிப்பதற்காக வந்துள்ளனர். அப்பொழுது மாணவர்களை தாக்கிய பாஸ்கருக்கு ஆதரவாக அவிநாசி பேரூராட்சி 17வார்டு திமுக கவுன்சிலர் ரமணியின் கணவர் துரை என்பவர் பள்ளிக்கு வந்து ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களிடம் குடிபோதையில் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

நீங்க இதையெல்லாம் கேட்க கூடாது என்று போதையில் ஒருமையில் பள்ளி குழந்தைகளின் முன்பாகவே அனைவரையும் அநாகரீகமாக பேசிய கவுன்சிலரின் கணவரிடம் , நீங்க தப்ப தட்டிகேட்க வேண்டியதுதானே என்று தலைமை ஆசிரியர் கூறவும், கோபத்தின் உச்சிக்கு சென்ற துரை தலைமை ஆசிரியர் செந்தாமரை கண்ணனை கழுத்தை நெறித்து தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

தி.மு.க. கவுன்சிலரின் கணவர் போதையில் பள்ளிக்குள் புகுந்து பள்ளி தலைமையாசிரியரை தாக்கும் காட்சி தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.